பிரபல கம்பெனிகள் பெயரில் போலியாகத் வீட்டு உபயோகப் பொருட்களைத் தயாரித்த இரண்டு பேரை கைது செய்த போலீசார், மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
சென்னை குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் இயக்குநர் முகமது ஷகில் அக்தர் அறிவுரையின்படி, காவல் கண்காணிப்பாளர் ஜி.இராமர் உத்தரவின் பேரில் அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவின் அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் 21.05.2020 அன்று சென்னை வி.எம். தெருவில் உள்ள ஜினால் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு போலியாகத் தயார் செய்யப்பட்டிருந்த டாபர், கோத்ரேஜ், ரெக்கிட் பென்கிஸர் மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் லிட் நிறுவனங்களின் வீட்டு உபயோகப் பொருட்களின் மாதிரிகள் கைப்பற்றப்பட்டது.
இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டபோது, சென்னை வடபெரும்பாக்கத்தில் மேற்படி போலியான வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரித்து கிடங்களில் வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு சென்று போலீசார் சோதனை நடத்தியதில் அங்கு சுமார் ரூபாய் 4 லட்சம் மதிப்புள்ள போலியான வீட்டு உபயோகப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
போலியாக வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கப்பட்டது தொடர்பாக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த துளவி நாது சிங் மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஸ் ரானா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த குற்றவாளி ரமேஷ் படேல் என்பவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.