Skip to main content

புவியியல் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப கோரி வழக்கு - பள்ளிக்கல்வி இயக்குநருக்கு நோட்டீஸ்

Published on 01/09/2018 | Edited on 01/09/2018
m

 

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் திண்டுக்கல் டி.சவுமியா, கரூர் பி.மாலதி, நமக்கல் டி.சசிகலாதேவி, சி.ஐயப்பன், ஈரோடு பி.நல்லசாமி, சேலம் சி.ஜெயகுமார் ஆகியோர் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில்,  ‘’நாங்கள் பிஎஸ்சி (புவியியல்), பிஎட் படித்துள்ளோம். தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி விதிகளின்படி சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் செய்ய தகுதி பெற்றுள்ளோம். தமிழகத்தில் 2012-2013 மற்றும் 2015- 2016 கல்வி ஆண்டுகளில் 420 சமூக அறிவியல் (புவியியல்) பட்டதாரி ஆசிரியர் பின்னடைவு பணியிடங்கள் காலியாக இருப்பது தெரியவந்தது.  இந்த காலியிடங்களை நிரப்புவதற்காக 2014-ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. பின்னர் 11 காலியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டன. எஞ்சிய 409 பணியிடங்களை இப்போது வரை நிரப்பப்படவில்லை.

 

இந்தநிலையில் 2017-ல் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் நாங்கள் வெற்றிப்பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றோம். அப்போது எங்களது கல்வித் தகுதி அடிப்படையில் ஒவ்வொரு படிப்பிலும் நாங்கள் பெற்ற மதிப்பெண்ணுக்காக தனியாக கருணை மதிப்பெண்ணும் வழங்கப்பட்டது. இதனால் சமூக அறிவியல் (புவியியல்) ஆசிரியர் பின்னடைவு பணி நியமனத்துக்காக காத்திருக்கிறோம்.


இதனிடையே ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிப்பெற்றது மட்டுமின்றி அரசு நடத்தும் போட்டித் தேர்வில் வெற்றிப்பெறுவோர் மட்டுமே ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுவார்கள் என தமிழக அரசு 20.07.2018-ல் அரசாணை பிறப்பித்துள்ளது. பின்னடைவு ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணி 2014-ல் தொடங்கியது. இதனால் அப்போது அமலில் இருந்த பணி நியமன நடைமுறைகளை பின்பற்றியே பின்னடைவு பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

எனவே பள்ளிக்கல்வித்துறை 2014-ல் வெளியிட்ட அரசாணையை பின்பற்றாமல் பின்னடைவு சமூக அறிவியல் (புவியியல்) பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தடை விதித்தும், 2017-ல் சான்றிதழ் சரிபார்ப்பின் போது வழங்கப்பட்ட கருணை மதிப்பெண் அடிப்படையில் பின்னடைவு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் எங்களை நியமனம் செய்யவும், போட்டித் தேர்வு அரசாணையை பின்பற்றாமல் 2014-ல் அமலில் இருந்த பணி நியமன முறைகளை பின்பற்றி பின்னடைவு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

 

இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பள்ளிக்கல்வி இயக்குனர், தொடக்கக்கல்வி இயக்குனர், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, செப்டம்பர் 11-க்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

 

சார்ந்த செய்திகள்