Skip to main content

ராஜாவின் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைப்பு

Published on 19/02/2023 | Edited on 19/02/2023

 

fisherman raja's body was handed over to his family

 

தமிழக கர்நாடக எல்லையில் கடந்த 14 ஆம் தேதி பரிசலில் சென்ற தமிழக மீனவர்கள் சிலர் கர்நாடக வனப்பகுதியில் மான்களை வேட்டையாடினர் எனக் கூறப்படுகிறது. துப்பாக்கிச் சத்தம் கேட்டு அங்கு வந்த கர்நாடக வனத்துறையினர் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இருதரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டினைத் தொடர்ந்து கோவிந்தபாடியைச் சேர்ந்த மீனவர் ராஜா என்கிற காரவடையான் என்பவரைக் காணவில்லை. இதனைத் தொடர்ந்து காரவடையானை உறவினர்கள் தேடி வந்த நிலையில், வெள்ளிக்கிழமை 17 ஆம் தேதி காலை பாலாற்றங்கரையில் சொறிபாறையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

 

கர்நாடக வனத்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதால்தான் காரவடையான் உயிரிழந்ததாக மக்கள் குற்றம் சாட்டினர். தொடர்ந்து உடலை மீட்ட காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், உடலை பிரேதப் பரிசோதனை செய்யக்கூடாது என்றும் பிரேதப் பரிசோதனை செய்தால் உடலை வாங்க மாட்டோம் எனவும் கூறி காரவடையான் உறவினர்கள் உடலை வாங்க மறுப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். தொடர்ந்து நேற்றும் இரண்டாவது நாளாக உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். மேலும், உயிரிழந்த மீனவரின் குடும்பத்திற்கு கர்நாடகத்திடம் இருந்து 50 லட்ச ரூபாய் நிவாரணம் பெற்றுத்தர வேண்டும். இறந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்கப்பட வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் போராட்டம் நடத்தினர். 

 

இந்நிலையில், நேற்று காலை போராட்டம் செய்தவர்களிடம் மீனவரின் உடலைப் பெற்றுக்கொள்ள பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பயணியர் மாளிகையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் மாவட்ட எஸ்.பி. சிவக்குமார், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் ஆகியோர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையில் உறவினர்கள் சில நிபந்தனைகள் விதித்தனர். அதில் பிரேதப் பரிசோதனை செய்வதை காணொலியாக பதிவு செய்ய வேண்டும். மேலும், பிரேதப் பரிசோதனை செய்யும் போது எங்கள் மருத்துவர் ஒருவர் உடன் இருக்க வேண்டும் எனக் கோரிகை விடுத்தனர். இதற்கு அதிகாரிகள் சம்மதம் தெரிவித்த நிலையில், உடலைப் பெறுவதாக உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். உறவினர்கள் பிரேதப் பரிசோதனைக்காக கையெழுத்திட்டதை தொடர்ந்து நேற்று மாலை பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. 

 

இந்நிலையில், சேலம் மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்த மீனவர் காரவடையான் உடல் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மீனவர் காரவடையான் உடலை சொந்த ஊருக்கு கொண்டு சென்று அடக்கம் செய்ய உள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்