தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மாநிலம் முழுவதும் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பொதுமக்கள் வரிசையில் ஆர்வமுடன் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். கரோனா அச்சுறுத்தல் நிறைந்த சூழலுக்கு இடையே நடைபெறும் தேர்தல் என்பதால் வாக்குப்பதிவு மையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் மட்டுமின்றி திரைத்துறையினரும் அரசியல் பிரமுகர்களும் வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், தி.நகர் இந்தி பிரச்சார சபா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் இன்று காலை 7.10 மணி அளவில் 80 வயது வசுந்தரா என்கிற மூதாட்டி முதல் நபராக தனது வாக்கைப் பதிவு செய்தார். அதன்பிறகு பெரும் கூட்டமில்லாமல் காலை சுமார் 10 மணிவரை வெறிச்சோடி இருந்தது. அதன்பிறகு அந்த வாக்குச் சாவடி மையத்தில் மக்கள் வாக்களிக்க தொடங்கினர்.