அரியலூர் மாவட்ட டெல்டா பகுதியான திருமானூர், டி.பழூர் பகுதிகளில் 2023ம் ஆண்டில் தென்மேற்கு பருவ மழையும் வடகிழக்கு பருவ மழையும் பொய்த்துப் போனதால், விவசாயிகள் இருக்கின்ற நீரைக் கொண்டு குறைந்த நாட்களில் நெல் நடவு செய்து அறுவடை செய்ய ஏதுவாகத் தனியார் நிறுவனங்களில் விதை நெல்லை வாங்கி விதைத்தனர். அந்த நெற்பயிர் நடவு செய்த 2 மாதங்களிலேயே அரை குறை வளர்ச்சியுடன் கதிர் வர ஆரம்பித்ததால் விவசாயிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளனர்.
“விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கிய நெல் விதை வழங்கிய தனியார் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தொகையாகப் பெற்றுத் தர வேண்டும். மேலும், வரும் காலங்களில் நெல் விதைகளைத் தனியார் விற்பனை செய்வது தடை செய்து அரசே விவசாயிகளுக்கு விதை நெல் வழங்கிட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
தனியார் நிறுவனங்கள் வழங்கிடும் மக்காச்சோளப் பயிருக்கான விதைகளை பயன்படுத்தி கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாகப் படைப்புழு தாக்கத்தால் தொடர் நட்டத்தை சந்தித்து வரும் நிலையில், தற்போது நெல் ரக விதைகளிலும் தனியார் நிறுவனங்கள் மோசடி செய்துள்ளது. விவசாயிகளை பெரும் துயரத்தில் நஷ்டத்தில் ஆழ்த்தி உள்ளது. எனவே தமிழக அரசு வேளாண்துறை மூலம் தரமான விதைகளை வழங்கிட வேண்டும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ. 50 ஆயிரம் ஏக்கருக்கு இழப்பீடு உடனடியாக கிடைத்திட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என அனைத்து விவசாயிகள் சார்பில் அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நெல், மக்காச்சோளம் போன்ற விதைகளில் தனியார் நிறுவனங்கள் தரமற்ற விதைகளை விற்பனை செய்வது தொடர்ந்து நடைபெற்று வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதற்கு அரசு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்கிறார்கள் விவசாயிகள்.