Skip to main content

போலியாக இ-பாஸ் தயாரித்துத் தந்த கம்ப்யூட்டர் சென்டர்களுக்கு சீல்!

Published on 11/08/2020 | Edited on 11/08/2020

 

Tiruvannamalai

 

கரோனா பரவலைத் தடுக்க தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும், ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்குச் செல்லவும் இ-பாஸ் பெற வேண்டும் எனக் கட்டாயப்படுத்துகிறது. இ-பாஸுக்கு விண்ணப்பித்தால் விண்ணப்பித்த சில நிமிடங்களில் அவை ரிஜக்ட் செய்யப்படுகிறது.


தந்தையின் மறைவு, நெருங்கிய உறவினர்களின் மறைவுக்குச் செல்வதற்குக் கூட இ-பாஸ் வழங்காமல் ரிஜக்ட் செய்தனர் ஒவ்வொரு மாவட்ட அதிகாரிகளும். இதனைப் பயன்படுத்திக்கொண்டு கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் அறிந்தவர்கள் குறுக்கு வழியில் இ-பாஸ் வழங்கினார்கள். அதாவது, ஏற்கனவே வழங்கப்பட்ட இ-பாஸ் ஜெராக்ஸ்களை கொண்டு அதேபோல் தாங்களே இ-பாஸ் உருவாக்கி வழங்குவது, மேலும் இ-பாஸ்க்கு அப்ரூவல் வழங்கும் அரசின் அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரி அல்லது ஊழியர்களில் ஒருவரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பணம் தந்து அப்ரூவல் வாங்குவது என நடந்துக்கொண்டு இருந்தது. இந்த புரோக்கர் மோசடி வெளியே வந்தும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் புரோக்கர்கள் மற்றும் மோசடிக்காரர்கள் இ-பாஸ் மூலம் ஆயிரம், ஆயிரமாகச் சம்பாதித்தனர்.


இந்நிலையில் இ-பாஸ் மோசடி குறித்து உயர்நீதிமன்றம் கண்டிப்பு, மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது, மக்களிடம் கொதிப்பு போன்றவை அதிகரித்ததுதம், புரோக்கர்கள் மற்றும் இ-பாஸ் மோசடி குறித்து ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் தீவிரம் காட்டுகிறது. அதன்படி திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இ-பாஸ் மோசடியில் ஈடுப்பட்ட இரண்டு கம்ப்யூட்டர் சென்டர்களுக்கு சீல் வைத்துள்ளனர் அதிகாரிகள்.


திருவண்ணாமலை நகரத்தில் ரோஸ் கம்ப்யூட்டர் என்கிற பெயரில் இயங்கி வந்த கம்ப்யூட்டர் சென்டரில், போலியாக இ-பாஸ் தயாரித்து வழங்குவதாக அதிகாரிகளுக்குச் சென்ற தகவலின் அடிப்படையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி மாலை அங்கு சென்று ஆய்வு நடத்தினர். ஆய்வில் அந்த கம்ப்யூட்டர் சென்டரில் நூற்றுக்கும் அதிகமானவர்களுக்கு போலியாக இ-பாஸ் தயாரித்து வழங்கியது கண்டறிந்து அந்த கம்ப்யூட்டர் சென்டர்க்கு சீல் வைத்தனர்.


அதேபோல் சமூக வலைத்தளத்தில் சென்னை, பெங்களுரூ, ஆந்திரா, தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்குச் செல்ல எங்களை தொடர்பு கொள்ளுங்கள் இ-பாஸ் ரெடி, வாகனம் ரெடி எனத் தொடர்ச்சியாக தகவல் பரப்பினார் விக்ரம் என்பவர். இதுபற்றிய தகவலை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்குச் சில இளைஞர்கள் கொண்டு சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து அவரின் உத்தரவுப்படி, காஞ்சி சாலையில் உள்ள கம்ப்யூட்டர் சென்டருக்கும் காவல்துறை மூலமாகப் பூட்டி சீல் வைத்துள்ளனர். எந்த அடிப்படையில் அவர்கள் இப்படித் தகவல் பரப்பினார்கள், இவர்களுக்கு மட்டும் இ-பாஸ் எப்படிக் கிடைத்தது என விசாரணை நடைபெற்றுவருகிறது.


போலி இ-பாஸ் தயாரித்து விற்பனை செய்தவர்கள் அடுத்ததாக கைது செய்யப்படலாம் எனக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

போலீசுக்கே விபூதி; ரா அதிகாரி என மிரட்டிய போலி அதிகாரி கைது 

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
Vibhuti to the police; Fake officer who threatened to be RAW officer arrested

கடலூர் மாவட்ட  காவல்துறையினர் மற்றும் சில பொதுமக்களுக்கு செவ்வாய்க்கிழமை தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. இந்த அழைப்பில் பேசியவர் ரா உளவுத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி என்றும் டெல்லியில் இருந்து வந்திருப்பதாகவும், சிதம்பரத்தில் உள்ள முக்கிய அரசியல் பிரமுகரின் மகனை கைது செய்ய வந்துள்ளதாகவும், இதற்கு தேவையான நடவடிக்கையை  எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பல கேள்விகளை காவல் அதிகாரிகள் கேட்டுள்ளனர். அதற்கு அவர் தெளிவாக பதிலை கூறியுள்ளார். இந்த தகவல் உண்மை என நம்பிய காவல்துறை  அதிகாரிகள். கைது நடவடிக்கைக்கு தேவையான காவலர்களை சிதம்பரம் நகர காவல் நிலையத்தில்  செவ்வாய்க்கிழமை இரவு 9 மணி வரை இருக்க உத்தரவிட்டனர்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் சிதம்பரம் நகர காவல்துறையினர் சிதம்பரம் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்குரிய முறையில் திரிந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை செய்துள்ளனர். அப்போது அவர் ரா அதிகாரி என்று கூறி மிரட்டியுள்ளார். காவலர்கள் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் அவர் பரங்கிப்பேட்டை ஆற்றங்கரையை தெருவைச் சேர்ந்த நீல ஒளி மகன் சிவசுப்பிரமணியன் ( 35)  எனவும் இவர் கடல் வாழ் உயிரினங்கள் குறித்து பட்டய படிப்பு முடித்துள்ளதாகவும், இவர் மும்பை பகுதியில் பணியில் இருந்த போது போதை பொருட்களுக்கு அடிமையாகி செங்கல்பட்டு போதை  மறுவாழ்வு மையத்தில் சிகிச்சையில் இருந்ததாகவும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை பகுதியில் உள்ள எம்எல்ஏ ஒருவரை தொலைபேசியில் மிரட்டியதற்காக சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு பிணையில் விடுதலையானவர் என்றும் தெரியவந்தது.

புதன்கிழமை இரவு சிதம்பரம் நகர போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதனால் மாவட்ட காவல்துறை மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

பெட்ரோல் பங்க் மேலாளர் மீது தாக்குதல்; திருவண்ணாமலையில் பரபரப்பு

Published on 25/12/2023 | Edited on 25/12/2023
incident for petrol station manager in Tiruvannamalai

திருவண்ணாமலை வேலூர் சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ளது திருச்செந்தூர் பெட்ரோல் பங்க். இந்த பெட்ரோல் பங்கில் நேற்று மாலை  (24.12.2023) இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த நான்கு இளைஞர்கள் வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு பணத்தை இவர் கொடுப்பார் அவர் கொடுப்பார் என மாறி மாறி கூறியதையடுத்து பெட்ரோல் பங்க் ஊழியருக்கும் அந்த இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் பெட்ரோல் பங்கில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதை அறிந்த மேலாளர் தனது அறையில் இருந்து வெளியே வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மற்றும் மேலாளரை மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பித்ததாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து 30 நிமிடங்கள் கழித்து மீண்டும் தனது நண்பர்களுடன் பெட்ரோல் பங்குக்கு கையில் அரிவாளுடன் வந்த இளைஞர்கள் மேலாளர் ரகுராமனை அறிவாளால் சரமாரியாக தாக்கியதில் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு கொடுத்த தகவலினல் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து போலீஸார் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு அறிவாளால் வெட்டி விட்டு தப்பித்துச் சென்ற இளைஞர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

பெட்ரோல் போட்டு விட்டு பணம் கேட்டதால் ஏற்பட்ட தகராறு இளைஞர்கள் பெட்ரோல் பங்க் மேலாளரை அறிவாளால் சரமாரியாக கொலைவெறி தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து இன்று காலை 8 மணி முதல் 10 மணி வரை நகரத்தில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க்குகளும் இந்த சம்பவத்தை கண்டித்து ஸ்ட்ரைக்கில் ஈடுப்பட்டன. இதனால் வாகன ஓட்டிகள் பெட்ரோல், டீசல் போடமுடியாமல் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர்.