
தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்தின் புகைப்படத்தை வைத்து, சமூக வலைதளங்களில் அவருக்கு உடல்நிலை சரியில்லாததாகவும், அதற்குத் தேவையான மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு நிதி உதவி செய்யுமாறும் அவரே கேட்பதுபோல் சித்தரிக்கப்பட்டு ஒரு செய்தி பரவியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் செய்தி குறித்து தன்னுடைய வலைப்பக்கத்தில் பதிவு செய்துள்ள ஆர்.ஜி.ஆனந்த், தன்னுடைய உடல்நிலை சரியாக உள்ளதாகவும், நான் யாரிடமும் எதற்காகவும் பண உதவி கேட்டு எந்தத் தகவலையும் பதிவிடவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். எனவே இப்படிப் பொய்யான தகவல்களை பரப்பும் மர்ம நபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்து அவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, இன்று அவருடைய சார்பில் காவல்துறை ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தவறான செய்திகளைப் பரப்பும் நபரை உடனடியாகக் கைது செய்வதோடு அந்தச் சமூக வலைத்தள கணக்கை முடக்கவேண்டும் என்றும் அந்தப் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.