Skip to main content

பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று தொடக்கம்!

Published on 27/05/2020 | Edited on 27/05/2020

 

salem


தமிழகம் முழுவதும் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று (மே 27, 2020) தொடங்குகிறது. சேலம் மாவட்டத்தில், ஆறு மையங்களில் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நடக்கின்றன. இப்பணிகள் ஜூன் 23ஆம் தேதி நிறைவு பெறுகின்றன. 


சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை, விடைத்தாள் மதிப்பீட்டு முகாம்களில் 266 முதன்மைத் தேர்வாளர்கள், 266 கூர்ந்தாய்வு அலுவலர்கள், 1544 உதவித்தேர்வாளர்கள், 275 இதர பணியாளர்கள் மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபடுகின்றனர். 
 


சேலம் கல்வி மாவட்டத்தில் மாசிநாயக்கன்பட்டி ஸ்ரீசுவாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நோட்ரிடேம் பள்ளி ஆகிய மையங்களில் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நடக்கின்றன.


ஆத்தூர் கல்வி மாவட்டத்தில் தேவியாக்குறிச்சியில் உள்ள தாகூர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பாரதியார் மெட்ரிக் பள்ளி ஆகிய இரண்டு மையங்கள் விடைத்தாள் மதிப்பீட்டுக்காக அமைக்கப்பட்டு உள்ளன. 


எடப்பாடி கல்வி மாவட்டத்தில், மேட்டூர் மால்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், எம்.ஏ.எம். ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


இதற்கான முன்னேற்பாட்டுக் கூட்டம், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் செவ்வாயன்று (மே 26) நடந்தது. விடைத்தாள் திருத்தும் பணிகளை பாதுகாப்பான முறையில் மேற்கொள்ளும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டன. கரோனா தொற்று பரவாமல் தடுக்க செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் ராமன் கூறியதாவது: 
 


விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களில் ஒவ்வொரு நாளும் விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்குவதற்கு முன்பும், பணிகள் முடிந்த பின்பும் இருமுறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.


விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு மீண்டும் பயன்படுத்தக்கூடிய 3 முகக்கவசங்கள் வழங்கப்படும். மேலும், ஒவ்வொரு நபருக்கும் தனித்தனியாக கிருமி நாசினி வழங்கப்பட உள்ளது.

 

salem


விடைத்தாள் மதிப்பீட்டு முகாம்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றும் வகையில், ஓர் அறையில் ஒரு முதன்மைத் தேர்வாளர் (சி.இ.), ஒரு கூர்ந்தாய்வாளர் (எஸ்.ஓ.), 6 உதவித் தேர்வாளர்கள் (ஏ.இ.) என மொத்தம் 8 பேர் மட்டுமே அமர்ந்து விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.


ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் விடைத்தாள் மதிப்பீட்டு மையத்திற்கு வருகைபுரியும்போது, தங்களது கைகளைச் சோப்புப் போட்டு சுத்தம் செய்வதற்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிக்கு ஊருக்குத் திரும்ப வரும் ஆசிரியர்கள், தங்களது அடையாள அட்டை காண்பிக்கும் பட்சத்தில் அவர்கள் டி.என்.இ & பாஸ் இல்லாமல் அனுமதிக்கப்படுவர். 


விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மதிப்பீட்டு முகாம்களுக்கு வந்து செல்ல தேவையான 23 வழித்தடங்களில் 26 அரசுப்பேருந்துகள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயக்கப்பட உள்ளன.


மதிப்பீட்டு மையங்களில் பணியாற்றும் அனைவருக்கும் சுத்தரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
 

http://onelink.to/nknapp

 

இம்மையங்களில் உள்ள கழிவறைகள் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை கிருமி நாசினி மூலம் தூய்மைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 


தன்னார்வலர்கள் மூலம் விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களில் பணியாற்றும் பணியாளர்களிடையே சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், முகக்கவசம் மற்றும் கிருமி நாசினி பயன்படுத்துவதை உறுதி செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


இவ்வாறு ஆட்சியர் ராமன் தெரிவித்தார். 


முன்னேற்பாட்டுக் கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் அருள்ஜோதி அரசன், மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், மேட்டூர் சார் ஆட்சியர் சரவணன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் நிர்மல்சன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி உள்ளிட்டோர் கலந்த கொண்டனர்.
 


 

சார்ந்த செய்திகள்