Skip to main content

அத்துமீறிய ஆசிரியர்! மாணவிகள் எடுத்த அதிரடி முடிவு..! 

Published on 22/11/2021 | Edited on 22/11/2021

 

Erode school teacher arrested under pocso

 

ஈரோடு மாவட்டம், பெருந்துறை சுல்லிப்பாளையம் கூட்டுறவு நகரைச் சேர்ந்தவர் 49வயது திருமலை மூர்த்தி. இவர், பெருந்துறை அருகே உள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு உயிரியல் பாட ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் திருமலை மூர்த்தி, மாணவிகளிடம் தொடர்ந்து இரட்டை அர்த்தத்தில் பேசுவதும், தனது அருகே மாணவிகளை அழைத்துத் தொட்டுப் பேசுவதும், ஆன்லைன் வகுப்புகளின் போது மாணவிகளை சினிமா பாடலுக்கு நடனம் ஆடச் சொல்லி வற்புறுத்தியும் வந்துள்ளார். 

 

அது மட்டுமல்லாமல் மாணவிகளை அளவு எடுப்பதாகக் கூறி சம்பந்தமே இல்லாமல் மாணவிகள் உடல் மேல் கை வைத்துள்ளார். சில மாணவிகள், ‘சார் இதுவெல்லாம் தப்புங்க சார்’ என்று வெளிப்படையாகவே கூற "ஏண்டா கண்னு நான் உங்க அப்பா போல" என தனது பாலியல் சீண்டலுக்கு விளக்கமும் கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் ஓரிரு மாணவிகள் தலைமையாசிரியர் கணேசனிடம் உயிரியல் ஆசிரியர் திருமலை மூர்த்தி சார் நடவடிக்கை தவறாக இருக்கிறது என்று வெளிப்படையாகவே புகார் கூறியுள்ளனர். ஆனால், தலைமையாசிரியர் கணேசன் இதையெல்லாம் வெளியே சொல்லக் கூடாது நான் பார்த்துக் கொள்கிறேன் என மாணவிகளிடம் சமாதானம் பேசியிருக்கிறார்.

 

Erode school teacher arrested under pocso

 

பள்ளி நிர்வாகத்திடம் நியாயம் கிடைக்காது என்பதை உணர்ந்த மாணவிகள் நம்பிக்கைக்குரிய சக மாணவர்களிடம் ஆசிரியரின் எல்லை மீறலை விபரமாகக் கூறியதோடு கடிதமாகவும் எழுதி வெளியிட்டனர்.

 

கோவை மாணவி தற்கொலை சம்பவம் போல பெருந்துறையிலும் நிகழ்ந்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த மாணவர்கள் சிலர் மாணவிகளிடம் தவறாக நடக்கும் உயிரியல் ஆசிரியர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என தலைமையாசிரியரிடம் கேள்வி கேட்டனர். அதற்கு தலைமையாசிரியர், “நான் விசாரித்து விட்டேன் மாணவிகள் கூறுவது பொய் புகார் நீங்கள் இதைப் பெரிதுபடுத்தினால் உங்களைப் பள்ளியை விட்டே நீக்கி விடுவேன்” என மாணவர்களை எச்சரித்து ஆசிரியர் திருமலை மூர்த்திக்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார். ஆனால் இதற்கெல்லாம் அஞ்சாத மாணவர்கள் சைல்டு லைன் பிரிவு, கல்வித்துறை உயரதிகாரிகள், மாவட்ட காவல் துறை எஸ்.பி. சசிமோகன் ஆகியோருக்கு புகார் அனுப்பியதோடு மாணவ, மாணவியர் பெற்றோர்களுக்கும் இந்த அநியாய செயலை கொண்டு சென்றார்கள். 

 

அந்த கிராமமே பதட்டமானது, சாலை மறியல், பள்ளி முற்றுகை என போராட்டக்களமாக மாறியது. நேரடி விசாரணைக்கு வந்தார்கள் கல்வித்துறை, காவல் துறை, அரசு துறை அதிகாரிகள் தொடர் விசாரணையில் உயிரியல் ஆசிரியர் திருமலை மூர்த்தி மாணவிகளிடம் பாலியல் சீண்டல், தொடுதல், அத்துமீறல் போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆசிரியர் திருமலை மூர்த்தி மீது போக்சோ  சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் உடனே கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட திருமலை மூர்த்தி மீது துறை ரீதியான சஸ்பெண்ட் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியரைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட தலைமையாசிரியர் கணேசனும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தாளவாடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை ; வாழை மரங்கள் சேதம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தாளவாடி மலைப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக் காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

இந்தத் திடீர் சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்தது. அப்போது தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்டகாஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் விவசாயி தீபு (35) என்பவரின் 700 நேந்திரம் வாழை, சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழை, ராசு என்பவரின் 1000 வாழை, தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின்  1000 வாழை என 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது. அதேபோல் தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறை மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

மேலும், ராமாபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது. அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒருபுறம் மழை வந்ததால் சந்தோசம் இருந்த போதும், சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மட்டும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.