Skip to main content

டோர் டெலிவரி தொடர்ந்து நடைபெறுகிறது... தீவிர நடவடிக்கையில் காவல்துறை!!

Published on 07/06/2021 | Edited on 07/06/2021

 

Door delivery continues ... Police in action

 

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் தமிழ்நாடு அரசு முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்தியது. இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட சமூக விரோதிகள், சாராய வியாபாரிகள் ஆந்திரா, மஹாராஷ்ட்ரா, கர்நாடகா, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் இருந்து கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், மது பாட்டில்கள், சாராயம் ஆகியவற்றை தினசரி கடத்திவருகிறார்கள். இதற்கு முக்கியக் காரணம் தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதும், போதை ஆசாமிகள் மது இல்லாமல் தவிப்பதும்தான். அவர்களின் தாகத்தைப் போக்க ஒருபக்கம் மது வகைகளும், போதைப் பொருட்களும் கடத்திவரப்படுகின்றன. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் வீடுகளிலேயே கள்ளச்சாராயம் காய்ச்சுவது, கல்வராயன் மலை போன்ற பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சி அந்த சரக்கைப் பல்வேறு மாவட்டங்களுக்கும் கிராமங்களுக்கும் கடத்துவது தொடர் சம்பவங்களாக நடைபெற்றுவருகின்றன.

 

இதற்கு உதாரணமாக சில சம்பவங்களைப் பார்ப்போம். கள்ளக்குறிச்சி அருகிலுள்ள சித்தலூர், வேங்கை வாடி, பானையங்காவல், வாணவரெட்டி, புக்கிரவாரி, கலையநல்லூர் இப்படி பல்வேறு கிராமங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சும் தொழில் எக்ஸ்பிரஸ் வேகமெடுத்துள்ளன. இதற்காக தேர்ந்தெடுத்துள்ள இடம் மக்கள் நடமாட்டம் இல்லாத ஏரி பகுதிகள், விவசாய நிலப்பகுதி, வனத்துறைக்கு சொந்தமான காடுகள், ஊருக்குள்ளேயே தனித்திருக்கும் வீடுகள்... இப்படி பல்வேறு வழிகளில் எல்லாம் சாராயம் காய்ச்சும் தொழில் குடிசை தொழிலாகவே வேகமெடுத்துள்ளன. இப்படி காய்ச்சப்படும் சாராயம், செல்ஃபோன் மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆர்டர் கொடுத்தால் போதும், வீடு தேடி கொண்டு சென்று டோர் டெலிவரி செய்யப்படுகிறது. 200, 300க்கு விற்பனை செய்யப்பட்டுவந்த ஒரு லிட்டர் சாராயம், டாஸ்மாக் மது கிடைக்காததால் தற்போது ஆயிரம் ரூபாய்வரை விலை உயர்ந்துள்ளதாம். இதை வாங்குபவர்கள் அந்த சாராயத்தில் மேலும் சுடுதண்ணீரைக் கலந்து விற்பனை செய்து அதிக லாபம் பார்க்கிறார்கள். ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு காய்கறி வாங்கச் செல்வதாக கூறி மினி லாரி, டெம்போ போன்ற வாகனங்கள் அங்கே சென்று காய்கறிகள், பழங்கள் கீரை போன்றவற்றைக் கொள்முதல் செய்வதோடு, அங்கிருந்து மதுபாட்டில்களை வாங்கி அதற்குள்ளே பதுக்கி வைத்து இங்கே கொண்டுவந்து அதிலும் கலப்படம் செய்து அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் சம்பாதித்துவருகிறார்கள்.

 

Door delivery continues ... Police in action

 

அது மட்டும் இல்லாமல், வீடுகளிலும் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது என்பதற்கு உதாரணமாக உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எ.வ.கோட்டை போலீசார், திருக்கோவிலூர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பிரஸ் என்ற பெயரில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கார் ஒன்று வேகமாக வந்தது. அந்தக் காரை மடக்கிப் பிடித்த போலீசார் சோதனை செய்தனர். அந்தக் காரில் 20 லிட்டர் கள்ளச்சாராயம் இருந்துள்ளது. இதையடுத்து அந்தக் காரையும் சாராயத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அந்தக் காரில் சாராயம் கடத்தி வந்தவர், புகை பெட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த மணி என்பதும் இவர் தனது ஊரில் உள்ள தன் வீட்டுக்குள் சாராய ஊறல் போட்டு குக்கரை வைத்து வீட்டுக்குள்ளேயே சாராயம் காய்ச்சி அதை கார், லாரிகள் மூலம் டியூப்களில் அடைத்து எடுத்துச் சென்று வெளியூர்களுகளில் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரது வீட்டுக்கு சென்று சோதனை செய்த போலீசார், அங்கிருந்த 5 லிட்டர் சாராயம் அதைக் காய்ச்ச பயன்படுத்தப்பட்ட குக்கர் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளனர். அதேபோன்று கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் உள்ள முந்திரிக்காடு கரும்பு தோட்டம் ஆகியவற்றைத் தேர்வுசெய்து அங்கே கள்ளச்சாராயம் காய்ச்சுவதும் தொடர் சம்பவங்களாக நடைபெற்றுவருகிறது.

 

பண்ருட்டி அருகில் உள்ள காமாட்சி பேட்டை என்ற கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது சம்பந்தமான தகவல் புதுப்பேட்டை காவல் நிலையத்திற்கு கிடைத்துள்ளது. அங்கிருந்த காவல் ஆய்வாளர் நந்தகுமார், தனிப்பிரிவு போலீசார் கோபால் உள்ளிட்ட போலீசார் அங்கு விரைந்து சென்று ஆய்வுசெய்தபோது, வீட்டிலேயே திருட்டுத்தனமாக சாராயம் காய்ச்சிய மணிகண்டன், சிவ மணிகண்டன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அதேபோன்று புதுச்சேரி பகுதியிலிருந்து கடத்திவந்த கொக்குப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் என்பவரை 24 கலப்பட மது பாட்டில்களுடன் அவரை கைது செய்துள்ளனர். அதேபோன்று ஆண்டிகுப்பம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்ற 50 வயது ஐயப்பன் என்பவரையும் சத்யராஜ் என்பவரையும் கள்ளசாராய பாட்டில்களுடன் கைதுசெய்துள்ளனர். இதுபோன்று கள்ளச்சாராயம் காய்ச்சுதல் வெளிமாநில மது, கஞ்சா கடத்துதல்... இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்களில் கடலூர் மாவட்டத்தில் மட்டும் இதுவரை சுமார் 400க்கும் மேற்பட்டவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து மது, சாராயம், கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களையும் தேடித் தேடி கண்டுபிடித்து தடை செய்கின்றனர்.

 

Door delivery continues ... Police in action

 

ஆனால் இதையும் மீறி போதை ஆசாமிகளுக்கு வீடு தேடிச் சென்றுகொண்டிருக்கிறது போதை சரக்குகள். எனவே டாஸ்மாக் கடை திறந்தால், இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் குறைய வாய்ப்பு இருக்கிறது. சீன எழுத்து டாஸ்மாக் கடை மூலம் பல குடும்பங்கள் சீரழிவதை ஒருபக்கம் தடுத்தால், கடத்தல் மது, கஞ்சா, கள்ளச்சாராயம், புகையிலை பொருட்கள் என மற்றொரு வகையில் போதை ஆசாமிகளின் கைகளுக்கு கிடைத்துவிடுகிறது. இவை கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களின் கிராமங்களுக்குள் ஊடுருவிச் சென்றுகொண்டுதான் உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.