Skip to main content

விருத்தாசலத்தில் அ.தி.மு.கவினரிடையே கோஷ்டி மோதல்! மாணவிகள் அவதி! 

Published on 05/07/2019 | Edited on 05/07/2019

 

கடலூர் மாவட்டம்  விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். தமிழக அரசு மூலம் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு 2019-20 நடப்பாண்டில் பயிலும் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டது. அதுபோல் இன்று பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படுவதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்திருந்தது.

 

t

 

இந்நிலையில் 2017-18-ஆம் ஆண்டில் பயின்ற சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இதுவரை மடிக்கணினி  பெறாமல் இருந்து வந்துள்ளனர். இதனால் இன்று பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி  வழங்க இருந்த சூழ்நிலையில் நூற்றுக்கு மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் பள்ளியின் முன்பு திரண்டனர். 

 

t

 

அப்போது தங்களுக்கு வழங்க வேண்டிய மடிக்ணினிகளை வழங்கி விட்டு தற்போது பயிலும் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என கேட்டுள்ளனர். ஆனால் இதற்கு பள்ளி நிர்வாகம் மற்றும் கல்வித்துறை நிர்வாகமும் உடன்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவலறிந்த விருத்தாசலம் போலீசார் அவர்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட கல்வித்துறை நிர்வாகத்திடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. 

 

t

 

அதுபோல் விருத்தாசலத்திலுள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்த வருடம் பனிரெண்டாம் வகுப்பு படித்து முடித்த 300-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு, அரசு வழங்கும் இலவச மடிக்கணினி வழங்க தலைமையாசிரியர் அழைப்பு விடுத்ததின் பேரில் விருத்தாசலம் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் VT. கலைச்செல்வன் தனது ஆதரவாளருடன் பள்ளிக்குச் சென்றார். அப்போது, இச்செய்தியை அறிந்து அங்கு வந்த தொழில் துறை அமைச்சர் MC.சம்பத்தின் ஆதரவாளர்களான நகரச் செயலாளர் சந்திரகுமார் தரப்பினர் அமைச்சரின் அனுமதி பெற்றுத் தான் மடிக்கணினி வழங்க வேண்டும் என்று தலைமையாசிரிடம் முறையிட்டதால், எம்எல்ஏ -அமைச்சர் தரப்பு ஆதரவாளர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல்,  கூச்சல்,  குழப்பம் ஏற்பட்டதால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது. 

 

பிறகு, இரு தரப்பினரையும் சமாதானம் செய்த பள்ளி தலைமையாசிரியர்  அமைச்சர் அனுமதி பெற்று எம்எல்ஏ தலைமையில் மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதின் பேரில் கலைந்து சென்றனர்.   இச்சம்பவத்தால் மடிக்கணினி வழங்கும் விழா ரத்து செய்யப்பட்டதால் காத்திருந்த மாணவிகள் ஏமாற்றத்துடன் வீட்டிற்கு சென்றனர்.
 

சார்ந்த செய்திகள்