Skip to main content

கல்விக் கட்டணத்தில் 70 சதவீதத்தை 3 தவணைகளில் வசூலிக்க தனியார் பள்ளிகள் கோரிக்கை!- உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்!

Published on 03/07/2020 | Edited on 03/07/2020


 

coronavirus lockdown education fees schools government chennai high court

 

நடப்பு கல்வியாண்டுக்கான மொத்த கல்விக் கட்டணத்தில் 70 சதவீத தொகையை, மூன்று தவணைகளில் வசூலித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என, தனியார் பள்ளிகள் கோரிக்கை வைத்துள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 

தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகளில், கல்விக் கட்டணங்களை வசூலிக்க, பெற்றோர்களை நிர்ப்பந்திக்கக் கூடாது எனத் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

 

பேரிடர் மேலாண்மை சட்டப்படி, இதுபோன்ற பேரிடர் காலங்களில், கல்விக் கட்டணம் தொடர்பாக அரசு அரசாணை பிறப்பித்தாலும், அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தும் வகையில் திட்டங்கள் கொண்டு வர, தமிழக அரசு தவறிவிட்டதாகக் கூறி, கோவையைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

இந்த வழக்கு, நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பேரிடர் மேலாண்மை சட்டப்படி கொண்டு வரப்பட்ட இந்த அரசாணையை மீறும் கல்வி நிறுவனங்கள் குறித்து புகார் அளிக்க, தமிழக அரசு எந்தப் புகார் எண்களையும் அறிவிக்கவில்லை என, மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

 

மேலும், அரசாணையை மீறிய கல்வி நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்களை அரசு வெளியிடவில்லை எனவும், புகார் தெரிவிக்கப்படது. அப்போது, ஏற்கனவே வேறொரு வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, கல்விக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக, தனியார் பள்ளிகள் சார்பில் தமிழக அரசுக்குக் கொடுக்கப்பட்ட மனு பரிசீலனையில் உள்ளதாக, தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

http://onelink.to/nknapp

 

அதன்படி, இந்த ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தில் 70 சதவீத கட்டணத்தை, மூன்று தவணைகளாக வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என, தனியார் பள்ளிகள் கோரிக்கை வைத்துள்ளதாகத் தெரிவிக்கபட்டது. இதனைக் கேட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்குத் தள்ளி வைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்