Skip to main content

ஏழைகளின் கடவுள் மருத்துவர் பாஸ்கரன் மரணம்; கதறும் மக்கள்

Published on 29/01/2023 | Edited on 29/01/2023

 

Bhaskaran, a doctor for the poor, passed away; Tribute to people's tears

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தைச் சேர்ந்த மிளகாய் வியாபாரி பழனியப்பன். இவரது மகன் பாஸ்கரன் (58). 1990 முதல் கடந்த வாரம் வரை ஏழை எளிய மக்களுக்காகவே மருத்துவச் சேவை செய்து ஏழைகளின் கடவுளாகக் காணப்பட்டவர். இன்று மருத்துவர் பாஸ்கரன் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் ஆயிரக்கணக்கான மக்களை கண்ணீரோடு கதற வைத்துள்ளது.

 

அவரைப் பற்றிக் கூறும்போது, நடுத்தர குடும்பத்தில் பிறந்த பாஸ்கரன் கீரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தான் 1982-83 ல் +2 படிப்பை முடித்தார். பள்ளியில் படிக்கும்போதே தான் மருத்துவராகி ஏழை எளிய மக்களுக்கு மருத்துவம் செய்ய வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டிருந்தார். தனது லட்சியத்தை சக மாணவர்களிடம் சொல்லும் போது நண்பர்களின் ஊக்கம் அவரை மேலும் ஊக்கப்படுத்தியது. பள்ளிப் படிப்பு முடித்த நிலையில் அவர் நினைத்தது போலவே மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தது.

 

மருத்துவக் கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு சொந்த ஊருக்கு வந்து தனது வீட்டிலேயே தனது லட்சியமான மருத்துவ சேவையை தொடங்கினார். அரசு மருத்துவரான பிறகும் சொந்த ஊர் மக்களுக்காக மருத்துவ சேவையைத் தொடர்ந்தார். சொந்த கிளினிக் வைத்திருந்தாலும் பணத்தை எதிர்பார்க்காமல் சிகிச்சைக்கு வரும் மக்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனையும் மாத்திரை, மருந்துகளையும் பணத்தினைப் பெரிதாக எதிர்பாராமல் கொடுத்து அனுப்பினார்.

 

பிறகு பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணி செய்யும் போதும் மருத்துவர் பாஸ்கரனின் ஏழைகளுக்கான மருத்துவ சேவை தொடர்ந்தது. தனியாக கிளினிக் நடத்தும் போது தன்னை நம்பி பல கி.மீ கடந்து வரும் நோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகளுடன் பயணச் செலவுக்கும் பணம் கொடுத்து அனுப்புவார்.

 

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக பணி செய்யும் போது தனது தனியார் கிளினிக்கை தேடி வரும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு தனியாரில் அறுவை சிகிச்சை செய்ய லட்சங்களில் செலவாகும் என்று கூறி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அறுவை சிகிச்சை செய்து செலவை மிச்சப்படுத்தி உயிரைக் காப்பாற்றி அனுப்பிவிடுவார். அப்படி பணம் செலவில்லாமல் சிகிச்சை பெற்ற பலரும் அவரை சந்தித்து தனியாக பழங்களுடன் பணம் வைத்து கொடுக்கும் போது கோபமாகிவிடுவார். உங்களுக்கு பணம் விரயமாக வேண்டாம் என்று தான் அரசு மருத்துவமனையில் சிகிச்சை கொடுத்தேன். இப்பொழுது எனக்கே பணமா? இது என் சேவை; என்னை கேவலப்படுத்த வேண்டாம் என்று சொல்லும் போது பழம், பணத்தோடு வந்தவர்கள் கண்கலங்கி கைகளை குவித்து நன்றி சொல்வதை பலமுறை பார்த்திருக்கிறோம்.

 

அவரது கிளினிக்கிற்கு யார் சிகிச்சைக்கு போனாலும் ஊர்ல எல்லாரும் என்ன செய்றாங்க, எல்லாரும் நல்லா இருக்காங்களா? விவசாயம் எப்படி இருக்கு அம்மா நலமா அப்பா நலமா என்றெல்லாம் ஒரு உறவினர் போல விசாரித்துக் கொண்டே சிகிச்சை அளிப்பதோடு அவரது கனிவான பேச்சே நோய்களை குணமாக்கிவிடும். இப்படியே இவரால் குணமாக்கப்பட்டு உயிர்வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் இன்று கண்ணீர் வடிக்கிறார்கள்.

 

இப்படி பல சம்பவங்களைப் பகிர்ந்து கொள்ளும் பொதுமக்கள் இவர் டாக்டர் என்பதைவிட ஏழைகளின் கடவுள் என்றுதான் சொல்வோம். காசு பணம் இல்லைன்னாலும் உடல்நிலை சரியில்லை என்றால் நம்பிக்கையோட பாஸ்கரன் டாக்டர்கிட்ட போகலாம். இன்றைக்கு பலர் மருத்துவத்தை பணம் கொட்டும் துறையாக பார்க்கிறார்கள் ஆனால் பாஸ்கர் டாக்டர் கடைசி வரை உயிர்காக்கும் உன்னத சேவையாக பார்த்தார். அதனால் தான் இன்றைக்கு இத்தனை மக்களும் கண்ணீரோடு நிற்கிறார்கள் என்கின்றனர். மருத்துவர் பாஸ்கரனின் இழப்பு ஏழைகளுக்கான இழப்பு.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மம்தா பானர்ஜி உடல்நிலை குறித்து மருத்துவர் விளக்கம்!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Doctor explains Mamata Banerjee's health

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகள் வேட்பாளர்களையும் அறிவித்து வருகின்றன.

அந்த வகையில் மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் 42 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அம்மாநில முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கடந்த 10 ஆம் தேதி (10.03.2024) வெளியிட்டு 42 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்தார். இதனையடுத்து மம்தா பானர்ஜி தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த சூழலில் மம்தா பானர்ஜிக்கு நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். நெற்றியில் இருந்து முகத்தின் வழியாக ரத்தம் வழியும் புகைப்படத்தை திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டது.

Doctor explains Mamata Banerjee's health

அந்த பதிவில், “மம்தா பானர்ஜிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தயவுசெய்து அவரை உங்களின் பிரார்த்தனை மூலம் நல்ல நிலைக்கு வர வையுங்கள்” எனப் பதிவிடப்பட்டிருந்தது. மம்தா பானர்ஜி கொல்கத்தா வூட்பர்ன் பிளாக்கில் உள்ள எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனையின் விபத்து மற்றும் அவரச சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மேலும் மம்தா பானர்ஜிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பலவேறு தலைவர்களும் தங்களது ஆறுதலை தெரிவித்துள்ளனர்.

Doctor explains Mamata Banerjee's health!

இந்நிலையில் எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனையின் இயக்குநரும், மருத்துவருமான மணிமோய் பந்தோபாத்யாய் கூறும்போது, “மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று (14.03.2024) இரவு 07:30 மணியளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னால் இருந்து ஏற்பட்ட அதிர்வு காரணமாக வீட்டில் அவர் விழுந்த தடயம் உள்ளது. இதனால் அவரது பெருமூளை அதிர்ச்சி ஏற்பட்டு நெற்றியிலும் மூக்கிலும் கூர்மையான வெட்டு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. ஆரம்பத்தில் முதலில் மூளை மற்றும் நரம்பியல், மருந்தவியல் மற்றும் இதயவியல் ஆகிய துறையின் தலைமை மருத்துவர்கள் குழுவினரை கொண்டு, உடல் நிலை குறித்து பரிசோதித்து உறுதிபடுத்தப்பட்டது.

Doctor explains Mamata Banerjee's health!
மருத்துவர் மணிமோய் பந்தோபாத்யாய்

நெற்றியில் மூன்று தையல்கள் போடப்பட்டன. ஈ.சி.ஜி., சி.டி. ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மம்தா பானர்ஜி தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அவர் வீட்டிற்கு செல்ல விரும்பினார். இதனால் அவரை தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதுடன் மருத்துவர் குழுவின் ஆலோசனையின்படி தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படும். அவருக்கு நாளை (15.03.2024) மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதற்கேற்ப சிகிச்சை அளிப்பது குறித்து முடிவு செய்யப்படும்” எனத் தெரிவித்தார். 

Next Story

மருத்துவ சீட்டு தராத கவுன்சில்; சாதனை படைத்த உலகில் உயரம் குறைவான மருத்துவர்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
The world's shortest man holds the record to become doctor

3 அடி 4 அங்குலம் உயரம் கொண்ட 23 வயது இளைஞர், பல தடைகளை தாண்டி உலகில் உயரம் குறைவான மருத்துவர் என்ற சாதனை படைத்திருக்கிறார். இவரது சாதனைக்கு பலதரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. 

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் கணேஷ் பாரய்யா (23). விவசாய குடும்பத்தைச் சேர்ந்த கணேஷ் பாராய்யாவுக்கு சிறு வயதில் இருந்தே மருத்துவராக ஆக வேண்டும் என்ற கனவு இருந்துள்ளது. அதற்காக பள்ளிப்படிப்பை முடித்த கணேஷ் பாராய்யா, மருத்துவ படிப்பை மேற்கொள்வதற்காக நீட் தேர்விற்கு தயாராகினார். அதன் பிறகு, நீட் தேர்வில் 233 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார்.

அந்த மதிப்பெண் எடுத்தும் கூட, கணேஷின் உயரத்தை காரணமாக காட்டி இந்திய மருத்துவ கவுன்சில், அவர் மருத்துவராக தகுதி இல்லை என மருத்துவ சீட்டு கொடுக்க மறுத்துவிட்டது. அதன் பிறகு அவர், தான் படித்த பள்ளியின் முதல்வரின் உதவியோடு, மாவட்ட ஆட்சியர், மாநிலக் கல்வி அமைச்சரை அணுகியுள்ளார். அதன் பின்னர், அவர் குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால், அந்த வழக்கு குஜராத் நீதிமன்றத்தில் தோல்வி அடைந்த பிறகும் கூட கணேஷ் நம்பிக்கை இழக்காமல் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார். 

The world's shortest man holds the record to become doctor

பல மாதங்களாக போராடிய கணேஷ், கடந்த 2018ஆம் ஆண்டில் வெற்றி பெற்று 2019ஆம் ஆண்டில் மருத்துவ சீட்டை பெற்றார். இப்போது அவர், மருத்துவ படிப்பை முடித்த பிறகு பாவ்நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் பயிற்சியாளராக பணிபுரிந்து வருகிறார். 

இது தொடர்பாக கணேஷ் பாராய்யா செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “எனது உயரம் 3 அடி என்றும், அவசரகால வழக்குகளை என்னால் கையாள முடியாது என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் குழு என்னை நிராகரித்துவிட்டது. பாவ்நகர் கலெக்டரின் வழிகாட்டுதலின் பேரில், நான் குஜராத் உயர்நீதிமன்றத்திற்கு சென்றேன். 2 மாதங்களுக்குப் பிறகு, நாங்கள் வழக்கில் தோல்வி அடைந்தோம். அதன் பிறகு, உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று வழக்கு தொடுத்தோம். நான் மருத்துவ சீட்டு பெறலாம் என்று கடந்த 2019ஆம் ஆண்டில், உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தது. 

The world's shortest man holds the record to become doctor

அதன் பின்னர், எனக்கு பாவ்நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் அட்மிஷன் கிடைத்தது. எனது மருத்துவ பயணமும் தொடங்கியது. நோயாளிகள் என்னைப் பார்க்கும் போதெல்லாம் முதலில் திடுக்கிட்டார்கள். சிறிது நேரத்தில், அவர்கள் என்னை ஏற்றுக்கொண்டார்கள். அவர்களின் ஆரம்ப நடத்தையையும் நானும் ஏற்றுக்கொண்டிருக்கிறேன். அவர்கள் என்னுடன் அன்பாகவும் நேர்மறையாகவும் நடந்து கொள்கிறார்கள்” என்று கூறினார்.