அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சியில் நிரந்தர தொழிலாளர்களாகவும், ஒப்பந்தத் தொழிலாளர்களாகவும் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் பணியிலிருந்து வருகிறார்கள். இவர்களில் 180க்கும் மேற்பட்டவர்கள் நேற்று பணிக்குச் செல்லாமல் திடீரென நகராட்சி அலுவலக வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், “மாதந்தோறும் நகராட்சி வழங்க வேண்டிய சம்பளத்தை தரவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் கூடுதலாக பணி செய்ததற்காக தேர்தல் ஆணையம் வழங்கிய சம்பளத்தையும் தரவில்லை. தேர்தல் ஆணையம், நகராட்சி செலவிட்ட தொகையை நகராட்சிக்கு அளித்தும், எங்களுக்கு நகராட்சி அதிகாரிகள் அந்த தொகையை தரவில்லை” என்று கூறினர்.
இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து நகராட்சி ஆணையர் சுபாஷிணி, நகர் மன்றத் தலைவர் சிவக்குமார் ஆகியோர் அங்கு வந்து தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தப் பேச்சு வார்த்தையில் நகராட்சி ஆணையர் சுபாஷிணி, “பணியாளர்களுக்கு தர வேண்டிய சம்பளப் பாக்கி தொகை மற்றும் தேர்தல் பணிக்கான தொகை ஆகியவற்றை இந்த மாத இறுதிக்குள் அனைவருக்கும் வழங்கப்படும்” என்று உறுதியளித்தார். இதையடுத்து 2 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற போராட்டத்தை கைவிட்ட தூய்மைப் பணியாளர்கள் தூய்மைப் பணி செய்வதற்கு புறப்பட்டுச் சென்றனர்.