சிஐடியூ தொடர்ந்த வழக்கில் கோவை மாநகராட்சியில் காலியாகவுள்ள துப்புரவு பணியாளர்களுக்கான பணி நியமனத்தை நிறுத்தி வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
![high court](http://image.nakkheeran.in/cdn/farfuture/KpvlAv4TgCJ3yqpUbLJZYc32TbBTMHSnxuwYtdF0cZM/1575702855/sites/default/files/inline-images/1_203.jpg)
கோவை மாநகராட்சியில் கடந்த மாதம் 549 துப்புரவு காலிபணியிடங்களுக்காக 7000 பேர் விண்ணப்ப்த்திருந்தனர். இதனையடுத்து அவர்களுக்கான நேர்காணல் கடந்த மாதம் 27, 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த நேர்காணலில் 5200 பேர் கலந்து கொண்டனர். இதில் பொறியியல், கலை அறிவியல்களில் பட்டப்பட்டிப்பு படித்தவர்கள் சுமார் 1000 பேர் பங்கு பெற்றனர். இந்த வேலைக்கு தமிழ் எழுத படிக்கத்தெரிந்தால் போதும் என்ற நிலையில் , பட்டப்படிப்பு படித்தவர்கள் அதிகம்பேர் விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மாநகராட்சியில் துப்புரவு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் தொழிலாளர்கள் 180 க்கும் மேற்பட்டவர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் இதுவரை பதவி உயர்வு வழங்கவில்லை எனத்தெரிகிறது. மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் 3 வருடம் முதல் 20 வருடம் வரை அனுபவம் பெற்றவர்கள். இவர்கள் 2300 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு பணி நியமனம், பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் வழங்காமல் மாநகராட்சி இழுத்தடித்து வருகிறது.
![Cleaning staff appointment stoped](http://image.nakkheeran.in/cdn/farfuture/k12Rc-qwEfbJksAKWWYu7fTMyiMkkp7YuUbHle8bqLs/1575702893/sites/default/files/inline-images/2_110.jpg)
இது குறித்து மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியரிடம் ஆறு ஆண்டுகளாக மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனத்தெரிகிறது. இந்நிலையில் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர்கள் பொதுச்சங்கம் சிஐடியூவின் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் , மாநகராட்சியிலுள்ள 549 காலிபணியிடங்களுக்கான துப்புரவு பணியாளர்கள் நியமனத்தில் ஒப்பந்த பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வழக்கு தொடரப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் இது குறித்து விசாரித்து, கோவை மாநகராட்சி நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க உத்திரவிட்டுள்ளது. அதுவரைக்கும் துப்புரவு பணியாளர்கள் நியமனத்தை நிறுத்தி வைக்க இன்று உத்தரவிட்டுள்ளது.