உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 6 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.
உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. மராட்டியத்திற்கு அடுத்ததாக தமிழகத்தில் கரோனா தொற்று அதிக அளவு இருந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1.7 லட்சத்தைக் கடந்துள்ளது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளார்கள். மாவட்டங்களிலும் கரோனா தொற்று வேகமாக அதிகிரித்து வருகின்றது.
இந்நிலையில், நேற்று வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் படி 74 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் ஜூன் 10ஆம் தேதி வரை விடுபட்ட உயிரிழப்புகள் 444 சேர்த்து கரோனா உயிரிழப்பு 518 பேர் என கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் ஒட்டுமொத்த உயிரிழப்பு எண்ணிக்கை என்பது 3,144 ஆக அதிகரித்துள்ளது. விடுபட்ட அந்த 444 உயிரிழப்பில் ஒரு சிலருக்குக் கரோனா வைரஸ் பாதிப்பு இருந்துள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது. இந்நிலையில் கரோனா உயிரிழப்புக்களை மறைத்ததால் தமிழக மக்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், கரோனா மரணத்தைப் போல் கரோனா கால ஊழல்களும் விரைவில் வெளிச்சத்துக்கு வரும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்துத் தெரிவித்துள்ளார்.