
வருத்தம் என்று சொல்லி சமாளிக்கும் வேலையை விட்டுவிட்டு பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும் என்று செல்லூர் ராஜூவுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:–
உலகம் போற்றும் தமிழ்நாட்டு கலாச்சாரத்தில் தனித்த முத்திரையும், தனிச்சிறப்பும் கொண்டு, அருந்தமிழ் மொழிக்கு அளப்பெரிய தொண்டாற்றிய பகுதி செட்டிநாடும், அங்கு வாழும் நகரத்தார் மக்களும்.
எதற்கும் பிரயோஜனம் இல்லாத ஒரு அரசியல் தொடர்பான கேள்விக்கு மிகப்பெரிய நகைச்சுவையாக பதில் சொல்வதாக கருதி, இறைப்பணியையும், தூய தமிழ் பணியையும் செவ்வனேசெய்து அமைதியான வாழ்க்கை முறையை பின்பற்றும் பாசமிக்க நகரத்தாரைதொடர்புப்படுத்தி திரு.செல்லூர் ராஜு தெரிவித்தகருத்து கண்டனத்திற்குரியது.
அமைச்சர் பதவியில் உள்ளவர் பொறுப்பற்ற முறையில் இதைப்போன்ற கருத்துக்களை கூறி, குறிப்பிட்ட சமூகத்தினரின் உணர்வுகளை காயப்படுத்த முற்படும் செயல்களை இத்துடன் நிறுத்திக்கொண்டு. தன் கருத்துக்கு வருத்தம் என்று சொல்லி சமாளிக்கும் வேலையை விட்டுவிட்டு பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.