தென்காசி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட வாசுதேவநல்லூர் மற்றும் சங்கரன்கோவில் தொகுதி வாக்குச் சாவடிகளில் வாக்கு இயந்திர வரிசைகள் மாற்றிவைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வாக்குப் பதிவு அரை மணிநேரம் நிறுத்தப்பட்டது.
சங்கரன்கோவில் நகரின் 8-வது மற்றும் 14-வது வார்டுக்குட்பட்ட பகுதிகளின் வடகாசியம்மன் கோவில் தெருவில் உள்ள செங்குந்தர் நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குமையத்தை அ.ம.மு.க.வின் வேட்பாளர் பொன்னுத்தாய், மற்றும் அக்கட்சியின் மாவட்ட செயலாளருமான முத்தையா உள்ளிட்டவர்கள் பார்வையிட்டார்கள்.
அந்தசமயம் வாக்குச்சாவடியில் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறி வாக்குப்பதிவு இயந்திரங்கள் 2 முதல் 16 வரையிலான முதலில் வைக்கப்பட வேண்டிய வாக்குப்பதிவு இயந்திரம் இரண்டாவது வரிசையிலும், 17 முதல் 26 வரையுள்ள வாக்குப்பதிவு இயந்திரம் முதலாவது வரிசையிலும் வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தவர்கள் அதனை மாற்றி முறையான வரிசையில் வைக்க வலியுறுத்தினர். ஆனால், சரியான வரிசையில் தான் வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி சொன்னதை ஏற்றுக் கொள்ளாத அ.ம.மு.க.வினர், தேர்தல் அதிகாரி உடனடியாக வரவேண்டும் என்று கோரிக்கை எழுப்பினர். அதை எதிர்த்த அ.தி.மு.க.வினரோ வாக்குப் பதிவை நிறுத்தும் நேரத்தைக் கூடுதலாக அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் வாக்குப் பதிவு 30 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. மேலும் இது தொடர்பாக அ.ம.மு.க, அ.தி.மு.க.வினரிடையே தகராறு ஏற்பட்டது. தகவலறிந்த தேர்தல் அலுவலர் மற்றும் நகர இன்ஸ்பெக்டர் கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் ஸ்பாட்டுக்கு வந்து பார்வையிட்டதில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றி அமைக்கப்பட்டிருப்பது தெரியவர தேர்தல் அலுவலரின் உத்தரவுப்படியும் ஆணயத்தின் விதிமுறைப்படியும் மாற்றி அமைக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த டி.எஸ்.பி. ராஜேந்திரனி்டம், இதுபோன்று பல பகுதிகளில் விதிமீறல்கள் உள்ளன என முறையிட்டார் அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் முத்தையா. வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறைப்படி மாற்றியமைக்கப்பட்டதையடுத்து பரபரப்பு ஓய்ந்தது. இதேபோன்று வாசுதேவநல்லூர் தொகுதிக்குட்பட்ட வாக்குச் சாவடிகளிலும் மாற்றியமைக்கப்பட்ட வாக்கு இயந்திரங்கள் புகாருக்குப் பின்பு சரியாக மாற்றியமைக்கப்பட்டது. இதனால் அங்கேயும் வாக்குப் பதிவு 30 நிமிடம் தாமதத்திற்குள்ளானது.