Skip to main content

மதுரை எய்ம்ஸுக்கு நிதி ஒதுக்கீடு; அதிர்ந்துபோன தமிழ்நாடு!

Published on 27/02/2023 | Edited on 27/02/2023

 

central government has allocated only Rs 12.35 crore for Madurai AIIMS Hospital

 

கடந்த 2019 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு நான்காண்டுகள் கடந்தும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் கூட முழுமையாகக் கட்டி முடிக்கப்படாத நிலையே நீடித்து வரும் நிலையில், எப்போது பணிகள் தொடங்கும் என  எவருக்கும் தெரியாத சூழலே உள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு கேள்வி எழுப்பினாலும், மத்திய அரசு மவுனம் காத்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகம் வந்த பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் பணிகள் 90 சதவீதம் முடிந்துவிட்டதாக தெரிவித்தது பெரும் விசமர்சனத்திற்கு உள்ளானது. 

 

இந்த நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு குறித்த ஆர்டிஐ தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ரவிகுமார் என்ற சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்(ஆர்டிஐ) கீழ் 2014க்கு பிறகு இந்தியாவில் தொடங்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகளின் நிலை குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். 

 

அதற்கு பதிலளித்த மத்திய சுகாதார அமைச்சகம் நாடு முழுவதும் தொடங்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துமவனைகளின் பணிகள் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்துள்ளது. அதில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகளை மேற்கொள்ள ரூ. 1977.8 கோடி செலவாகும் எனத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இதுவரை மத்திய அரசால் மதுரை எய்ம்ஸ்க்காக ரூ.12.35 கோடி நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மதுரை எய்ம்ஸ்க்கு திட்டமிடப்பட்ட நிதியில் 1 சதவீதத்திற்கும் குறைவான நிதி ஒதுக்கீடாகும். மேலும் அதில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வரும் 2026ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

 

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையுடன் தொடங்கப்பட்ட உத்தரப்பிரதேசம், குஜராத், மகாராஷ்ட்டிரா, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பல மாநிலங்களில் கட்டப்பட்டு வரும் 16 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் சிலவற்றில் முழுவதும் பணிகள் முடிந்துவிட்டன. இன்னும் சில மருத்துவமனைகளில் 60 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில், மதுரை எய்ம்ஸில் மட்டும் பணிகள் தொடங்கப்படாமலே இருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

மத்திய அமைச்சர் மீது ஆர்.எஸ்.பாரதி புகார்

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
RS Bharati complains against Union Minister Shoba

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 1 ஆம் தேதி (01.03.2024) பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இந்த வெடி விபத்தில் மொத்தம் 10க்கும்  மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்தின் முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (N.I.A.) மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது

இத்தகைய சூழலில் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த வெடிகுண்டு சம்பவம் தமிழகத்தில் இருந்து வந்தவர்களால் தான் நடைபெற்றது” எனத் தெரிவித்திருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மேலும், மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜேயின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமைச்சரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

RS Bharati complains against Union Minister Shoba

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அ.தி.மு..க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மத்திய இணை அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்குள் உள்ளது.  சர்ச்சைக்குரிய மற்றும் பிளவுபடுத்தும் கருத்துக்களை அரசியல் தலைவர்கள் பேசக்கூடாது என ஏற்கெனவே தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், மத்திய இணை அமைச்சரின் பேச்சு கடும் கண்டனங்களைப் பெற்றுள்ள நிலையில், இரு மாநிலங்களுக்கு இடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாகவும், தமிழ்நாட்டு மக்களை இழிவுபடுத்தியதாகவும்  திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே மீது தேர்தல் ஆணையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.