Skip to main content

வாகன சோதனையில் காவல்துறையினர் அத்துமீறல்! - இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கு எலும்பு முறிவு!

Published on 12/09/2018 | Edited on 12/09/2018
Vehicle inspection


காவல்துறையினரின் அத்துமீறிய வாகன சோதனையின் போது, இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதால் சம்பந்தபட்ட காவலர் மீது வழக்கு பதிவு செய்யகோரி சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே குமாராட்சி காவல் நிலைய எல்லலைக்குட்பட்ட வீரநத்தம் என்ற இடத்தில் குமராட்சி காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காட்டுமன்னார்கோவிலை அடுத்த வீராண நல்லூர் கிரமத்தை சேர்ந்த குணசேகரன், பொன்னம்பலம் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அப்போது வாகனத்தை சோதனை செய்து கொண்டிருந்த காவலர்கள் இவர்கள் வாகனத்தை நிறுத்துவற்குள், வண்டியை ஓட்டிவந்தவரின் கையை பிடித்து இழுத்துள்ளார்.

இதில் வாகனத்தில் வந்த இருவரும், அவர்கள் ஓட்டிவந்த இருசக்கர வாகனமும் கீழே விழுந்ததில் அவர்கள் பலத்த காயம் அடைந்தனர். உடனடியாக அருகிலிருந்தவர்கள் அவர்களை மீட்டு காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். காயம் பட்டவர்களில் ஒருவருக்கு பலத்த எலும்பு முறிவும், மற்றொருவருக்கு அடி பலமாக பட்டதில் காதில் இருந்து ரத்தம் வந்துகொண்டிருந்தது. மேலும் காதில் இருந்து ரத்தம் வந்தவருக்கு மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 

Vehicle inspection


இது குறித்து பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ், மார்க்சிஸ்ட் கட்சியின் காட்டுமன்னார்கோயில் வட்டசெயலாளர் இளங்கோ மற்றும் கட்சியினர் சம்பவத்தை அறிந்து காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு வந்து விசாரித்துக் கொண்டு இருக்கையில், அப்போது அங்கு இருந்த குமராட்சி காவலர் ஒருவர் மருத்துவமனையில் உள்ள முதல் தகவல் அறிக்கை ரசீதை மருத்துவர் அனுமதி இல்லாமல் கிழித்து விட்டு சென்றார்.
 

Vehicle inspection


இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விதோச மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமையில் திங்கள் இரவு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து காவல்துறை ஆய்வாளர் ஷீயாம்சுந்தர் சம்பந்தபட்ட காவலர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கிறேன் என்று உறுதி கூறினார். இதனை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக இரவு நேரத்தில் விளக்கிகொள்ளப்பட்டது.

இந்நிலையில் செவ்வாய் காலை சம்பந்தபட்ட காவலர் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியினர் மற்றும் விபத்துக்குள்ளானவர்களின் உறவினர்கள் குமராட்சி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். வழக்கு பதிவது குறித்து காவல்துறை ஆய்வாளர் சரியான பதில் கூறாமல் மழுப்பலாக பேசியுள்ளார். பின்னர் ஆய்வாளரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைவரும் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பந்தபட்ட காவலர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோட்டாட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்