புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகளில் 8 வார்டுகளில் அதிமுகவினரும், 6 வார்டுகளில் திமுகவினரும், ஒரு வார்டில் சுயேட்சை வேட்பாளரும் வெற்றி பெற்றிருந்த நிலையில், சுயேட்சை கவுன்சிலர் அதிமுக பக்கம் போனதால் அதிமுகவினரின் பலம் 9 கவுன்சிலராக இருந்தது.
இந்த நிலையில் அதிமுகவில் இருக்கக்கூடிய கவுன்சிலர்களை திமுகவினர் கடத்தி சென்றுவிடுவார்கள் என்று அதிமுக தரப்பில் தொடர்ந்து புகார் கொடுக்கப்பட்டு வந்திருந்தது. அதனால் அதிமுக மற்றும் சுயேட்சை கவுன்சிலர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வந்து பதவியேற்று சென்றனர். இன்று நடந்த தலைவர் தேர்தலில் தொடர்ந்து பதற்றம் நிலவிய நிலையில், அதிமுக கவுன்சிலர்கள் 8 பேர் மற்றும் சுயேட்சை கவுன்சிலர் 1 என 9 பேர், காலை 6.30 மணிக்குள் பேரூராட்சி அலுவலகத்தில் சென்று விட்டனர். இதனால் திமுக மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் போலீசாருடன் தள்ளுமுள்ளு சம்பவத்தில் ஈடுபட்டதுடன் கல்வீச்சு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த கலவரம் நடந்து கொண்டிருந்த நிலையில், அதிமுக வேட்பாளராக சாலை பொன்னம்மாள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். வேட்பு மனுத் தாக்கல் காலம் முடியும் வரை வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் சாலை பொன்னம்மாள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து நடந்த கல்வீச்சு கலவரத்தால் போலீசார் தடியடி நடத்தினார்கள். திமுகவினர் நடத்திய கல்வீச்சில் திமுகவினர் 4 பேரும், போலீசார் 4 பேருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பதற்றம் நீடித்து கொண்டிருப்பதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.