Skip to main content

இ.பி.எஸ் முதல்வராக வேண்டி கஞ்சா கருப்பு குடும்பத்துடன் அக்னிச் சட்டி ஏந்தி நேர்த்திக் கடன்!

Published on 07/04/2023 | Edited on 07/04/2023

 

 actor Kanjakaruppu family Praying for EPS as Chief Minister

 

எடப்பாடி பழனிசாமி அடுத்து முதல்வராக வேண்டி நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு திருச்சி சமயபுரம் மாரியம்மனுக்கு குடும்பத்துடன் அக்னிச் சட்டி ஏந்தி நேர்த்திக் கடன் செலுத்தினார்.

 

திரைப்பட நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு, எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக ஆனதைத் தொடர்ந்து அடுத்து முதல்வராக வேண்டும் என வேண்டிக்கொண்டு மனைவி, மகன், மகள் மற்றும் உறவினர்களுடன் திருச்சி சமயபுரம் மாரியம்மனுக்கு அக்னிச் சட்டி ஏந்தியும், பால்குடம் எடுத்தும், பூக்கூடை சுமந்து வந்தும் நேர்த்திக் கடன் செலுத்தினார். முன்னதாக சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்பக் குளத்தில் இருந்து கஞ்சா கருப்பு அக்னிச் சட்டி ஏந்தியும், மகன் பால்குடம் சுமந்தும், மகள் வேப்பிலை உடை அணிந்தும் பூக்கூடை ஏந்தியும் மற்றும் உறவினர்கள் கோவிலை வலம் வந்து அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர்.

 

தொடர்ந்து செய்தியாளர்களிடம் நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு கூறுகையில், “எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக இருக்கிறார். மேலும் அவர் அடுத்து முதலமைச்சர் ஆக வேண்டும் என எனது குடும்பத்துடன் வேண்டிக் கொண்டு மகன், மகள் மற்றும் உறவினர்கள் உட்பட அனைவரும் சமயபுரம் மாரியம்மனுக்கு அக்னிச் சட்டி ஏந்தியும் பால்குடம் எடுத்தும் பூக்கூடை சுமந்து வந்தும் நேர்த்திக் கடனை செலுத்தி உள்ளோம். ஆளுங்கட்சியைப் பற்றி நான் சொல்லத் தேவையில்லை அது மக்களுக்கே தெரியும். இன்றைய காலகட்டத்தில் மின்சார கட்டணம், விலைவாசி உயர்ந்து வருகிறது. இதனால் நல்ல ஆட்சி தமிழகத்தில் அமைய வேண்டும் என சமயபுரம் மாரியம்மனிடம் வேண்டிக் கொண்டு நேர்த்திக் கடன் செலுத்தியுள்ளேன். திரைப்பட வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது. நாற்காலி, இறைவன் மிகப்பெரியவன்,  இடி முழக்கம், சபரி ஐயப்பா போன்ற படங்களில் நடித்துள்ளேன்” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்