Skip to main content

பெண்ணிடம் 70 லட்சம் மோசடி… வங்கி ஊழியர் கைது…

Published on 23/08/2021 | Edited on 23/08/2021

 

70 lakh scam against woman… Bank employee arrested

 

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பகுதி, நியூ டவுனைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. இவருடைய மனைவி ஆனந்தி (50). இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்திவருகிறார். இதற்காக திருவெறும்பூரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் அடிக்கடி நகைகளை அடகுவைத்து கடன் பெற்று, அதைத் திருப்பி செலுத்திவந்துள்ளார். அப்போது அங்கு நகை மதிப்பீட்டாளராக குணசீலம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் (33) என்பவர் வேலை பார்த்துவந்துள்ளார். 

 

ஆனந்தி, அடிக்கடி வங்கிக்குச் சென்று நகை அடகு வைத்து வந்ததால் பாஸ்கருடன் நல்ல அறிமுகம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று ஆனந்தி வங்கிக்குச் சென்றபோது பாஸ்கர், தான் தனியாக அடகு கடை நடத்திவருவதாகவும், அங்கு குறைந்த வட்டியில் பணம் தருவதாகவும் கூறியுள்ளார். மேலும், விருப்பப்பட்டால் நீங்களும் எனது அடகு கடையில் முதலீடு செய்யலாம் என்று தெரிவித்துள்ளார். வரும் லாபத்தில் பங்கு தருகிறேன் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.  

 

இதனை நம்பிய ஆனந்தி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரொக்கமாகவும், காசோலையாகவும் ரூ. 70 லட்சம்வரை முதலீடு செய்துள்ளார். ஆனால், பாஸ்கர் தெரிவித்ததுபோல் லாபம் தரவில்லை என்றும், முதலீடு செய்த பணத்தையும் திரும்ப கொடுக்காமல் மோசடி செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து ஆனந்தி, திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். 


அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவுசெய்த போலீசார், விசாரணை செய்துவந்தனர். இதற்கிடையே கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு வங்கி நிர்வாகம் பாஸ்கரை சஸ்பெண்ட் செய்தது. பின்னர் அவர் தலைமறைவாகியுள்ளார். போலீசார் அவரை தனிப்படை வைத்து தேடிவந்தனர். இந்நிலையில், பாஸ்கர் திருப்பூரில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார், பாஸ்கரை கைதுசெய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்