Skip to main content

டிரைவரின் புத்திசாலித்தனத்தால் மீட்கப்பட்ட 40 லட்சம் மதிப்புள்ள டேங்கர் லாரி!

Published on 25/08/2021 | Edited on 25/08/2021

 

40 lakh worth of oil and tanker truck recovered by driver's ingenuity

 

சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியிலிருந்து பெட்ரோலியம் கம்பெனியின் லாரி ஒன்று, 20 ஆயிரம் லிட்டர் (வாகனங்களுக்குப் பயன்படுத்தப்படும் ஆயில்) இன்ஜின் ஆயிலை நிரப்பிக்கொண்டு விழுப்புரம் அருகே கண்டமங்கலம் பகுதியில் உள்ள பள்ளிதென்னல் என்ற பகுதியில் இயங்கிவரும் தனியார் கம்பெனிக்கு கொண்டு சென்றது. அந்த ஆயிலைக் கொண்டு வருவதற்காக சென்னையிலிருந்து புறப்பட்ட லாரியை மதுரை பகுதியைச் சேர்ந்த விமல் காந்தன் என்பவர் ஓட்டிவந்தார். இதனையடுத்து, கண்டமங்கலம் அருகே உள்ள சம்பந்தப்பட்ட ஆயில் கம்பெனிக்கு அருகே லாரி வந்துகொண்டிருக்கும்போது, அங்கு திடீரென்று மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் லாரியை வழிமறித்து நிறுத்தி, தான் ஒரு போலீஸ் என்று கூறி லாரியை சோதனையிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

 

உண்மையான போலீஸ் என நம்பிய லாரி டிரைவர், டேங்கர் லாரியை நிறுத்தியுள்ளார். இதைச் சாதகமாகப் பயன்படுத்திகொண்ட அந்த மர்ம நபர், லாரி டிரைவரை  மிரட்டி அவரும் லாரியில் இருந்தபடியே டேங்கர் லாரியை கடத்திச் சென்றுள்ளார் மர்ம நபர். அப்போதுதான் இவர் உண்மையான போலீஸ் அல்ல என்பது டிரைவர் விமல் காந்தனுக்கு புரிந்தது. இந்நிலையில், அந்த லாரி மதகடிப்பட்டு அருகே வந்தபோது அந்த மர்ம நபரின் கூட்டாளிகள் இருவர் டேங்கர் லாரியில் ஏறிக்கொண்டனர். பின்னர், விழுப்புரம் நோக்கி சென்ற டேங்கர் லாரி சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதிக்கு வந்தது. பின்னர் அங்கிருந்த ஒரு தனியார் ஓட்டலின் அருகே டேங்கர் லாரியை நிறுத்திவிட்டு அதில் நிரப்பப்பட்டிருந்த இன்ஜின் ஆயிலை விற்பனை செய்வது தொடர்பாக அந்த மூன்று பேரும் ஆலோசனை செய்துகொண்டிருந்தனர். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட லாரி டிரைவர் விமல் காந்தன், நைசாக போலீசாருக்கு செல்ஃபோன் மூலம் தகவல் கொடுத்துள்ளார். உடனே விக்கிரவாண்டி போலீசார் டேங்கர் லாரி நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு விரைந்து சென்றனர்.

 

தங்கள் அருகே போலீசார் வேகமாக வருவதைக் கண்டதும் அந்த மூன்று மர்ம நபர்களும் லாரியையும் டிரைவரையும் விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து விக்கிரவாண்டி போலீசார், லாரி கடத்தப்பட்ட இடம் கண்டமங்கலம் காவல் நிலைய எல்லையில் உள்ளதால், கண்டமங்கலம் போலீசாரிடம் லாரியையும் டிரைவரையும் ஒப்படைத்தனர். இதுகுறித்து கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிவுசெய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், விழுப்புரத்தைச் சேர்ந்த ரிஷாந்த் என்பவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆயில் ஏற்றிக்கொண்டு வந்த டேங்கர் லாரியைக் கடத்தியது தெரியவந்தது. மேற்படி மூன்று பேரையும் போலீசார் தனிப்படை அமைத்து தேடிவருகிறார்கள். டேங்கர் லாரி டிரைவர் விமல் காந்தன் சமயோசிதமாக போலீசாருக்குத் தகவல் அளித்ததும் விரைந்து போலீசார் வந்ததால் 40 லட்சம் மதிப்புள்ள ஆயில் மற்றும் டேங்கர் லாரியை மீட்க முடிந்தது என்கிறார்கள் போலீசார். இந்தக் கடத்தல் சம்பவம் விழுப்புரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.

Next Story

நொடிப்பொழுதில் நிகழ்ந்த மரணம்! வெளியான அதிர்ச்சி வீடியோ!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Youth passed away after falling into water tank in Hyderabad

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் அருகே அமைந்துள்ளது கஜ்ஜிபவுலி. இப்பகுதியில் உள்ள தனியார் விடுதியில் வசித்து வந்தவர் ஷேக் அக்மல் சுபியான். 24 வயதான ஷேக் அக்மல் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர், பணி செய்வதற்கு ஏதுவாக வேலை செய்யும் ஐடி நிறுவனம் அருகிலேயே தனியார் விடுதியில் தங்கியிருந்துள்ளர்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி விடுமுறை என்பதால் ஷேக் அக்மல் விடுதி அருகில் உள்ள கடைக்கு மளிகை பொருட்கள் வாங்கச் சென்றுள்ளார். தேவையானதை வாங்கி முடித்தவர் மீண்டும் தனது விடுதிக்கு திரும்பியுள்ளார். அப்போது, அவர் தங்கியிருந்த விடுதியின் கேட் அருகே தண்ணீர் தொட்டி திறந்து கிடந்துள்ளது. ஆனால், அதனைக் கவனிக்காமல் சென்ற ஷேக் அக்மல், விடுதி வாசல் அருகே திறந்து வைக்கப்பட்டு இருந்த தண்ணீர் தொட்டில் தவறி விழுந்துள்ளார். நொடி பொழுதில் எதிர்பாராமல் தண்ணீர் தொட்டியில் விழுந்த வேகத்தில் ஷேக் அக்மல் சுபியானின் முக நாடிப் பகுதி தண்ணீர் தொட்டியின் கான்கீரிட் மீது பலமாக மோதி உடைந்தது. அதில், ரத்தம் கொட்டி மயக்க நிலையில் அவர் தண்ணீர் தொட்டியினுள் மூழ்கியதாக கூறப்படுகிறது. இதனை யாரும் கவனிக்காத நிலையில், இளைஞர் கீழே விழுந்த சத்தம் வீட்டின் உள்ளே இருந்த சிறுவனுக்கு மட்டும் கேட்டுள்ளது. சத்தம் கேட்ட அந்தச் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்ததை விட்டுவிட்டு விடுதி பொறுப்பாளரிடம் கூறுயுள்ளார். அப்போது, விடுதி வாசலுக்கு வந்தவர், திறந்துக்கிடந்த தண்ணீர் தொட்டிக்குள் யாரேனும் உள்ளனரா எனத் தேடிப்பார்த்துள்ளார்.

ஆனால், யாரும் தென்படாத நிலையில், தனது வழக்கமான பணிகளை மேற்கொள்ள அவர் சென்றுவிட்டார். அதன் பிறகு அங்கிருந்தவர்களும் தங்களது பணிகளை மேற்கொள்ள சென்றுவிட்டனர் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, மாலை நேரத்தில் ஷேக் அக்மல் காணவில்லை என்ற தகவல் விடுதி காப்பாளருக்குச் சென்றுள்ளது. அவர், விடுதியின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். அப்போதுதான் நடந்த அதிர்ச்சி சம்பவம் அனைவருக்கும் தெரிய வந்தது. கடைசியாக கடைக்குச் சென்று திரும்பிய ஷேக் அக்மல் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த காட்சிகள் சிசிடிசியில் பதிவிவாகி இருந்தது. இதைப்பார்த்து அதிர்ந்து போன விடுதி காப்பாளர் அங்கிருந்தவர்கள் உதவியுடன் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த  ஷேக் அக்மலினை மீட்டனர். ஆனால், அவர் இறுதியில் சடலமாகவே மீட்கப்பட்டார். இதையடுத்து, நடந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஷேக் அக்மல் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதனிடையே, ஷேக் அக்மல் தவறி விழும் சிசிடிசி காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி  வருகிறது. அதில், ஷேக் அக்மல் தவறி விழுவதும், உடனே சத்தம் கேட்டு குழந்தை விடுதி பொறுப்பாளரை எச்சரிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. ஆனால், விடுதி பொறுப்பாளர் தேடிப்பார்த்தும் யாரும் உள்ளே விழுந்தது போல தெரியாததால் அவர் மற்ற பணிகளைச் செய்வதும் தெரிய வந்துள்ளது. இதற்கிடையில், வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் துவங்கிய போலீசார் அஜாக்கிரதையாக தண்ணீர் தொட்டியைத் திறந்து வைத்த விடுதி உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இளைஞர் ஒருவர் தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத் அருகே வீட்டின் தண்ணீர் தொட்டியில் விழுந்த ஐடி ஊழியர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.