Skip to main content

சிக்கிய 212 கிலோ கஞ்சா! சிக்கப்போகும் கஞ்சா தலைவன் யார்?

Published on 13/05/2019 | Edited on 13/05/2019


திருச்சி மாநகரில் சமீபகாலமாக கொலைகள் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் ரவுடிஸமும் அதிகரித்து வருகிறது. மேலும் கல்லூரி மாணவர்களிடையே கஞ்சா போதை பொருட்கள் பயன்படுத்துவதும் அதிகரித்து வருகிறது. இதை எல்லாம் காவல்துறையினர் கண்டு கொள்வதே இல்லை.

 

cannabis

 

திருச்சி மாநகரில் பல இடங்களில் கஞ்சா விற்பனை என்பது கொடி கட்டி பறக்கிறது.  குறிப்பாக உறையூர், தில்லைநகர், பாலக்கரை, கோட்டை, பொன்மலை, சோம்பரசம்பேட்டை, திருவரம்பூர், அரியமங்கலம், ஸ்ரீரங்கம்,  என காவல்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

 

இவை எல்லாம் ரவுடிகளின் தலைமையில்தான் விற்பனை செய்யப்படுகிறது. ரவுடிகளிடம் மாமூல் வாங்கிகொண்டு கஞ்சா விற்பனை கண்டு கொள்ளாமல் விட்டு விடுகிறனர். மாதத்திற்கு ஏதாவது ஒரு வழக்கு மட்டும் ஸ்டேஷனுக்கு போட்டு விட்டுகின்றனர்.

 

இந்த நிலையில் தான் திருச்சி மாவட்டம் லால்குடி போலீஸ் டி.எஸ்.பி ராஜசேகர், சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தவர்கள், அப்படியே ரோந்து பணியிலும் சென்று கொண்டிருந்தனர். அப்போது திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் அடுத்துள்ள பள்ளிவிடை பாலம் அருகே சென்றபோது அங்கே சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு கார் நின்றது. வெகு நேரமாக அங்கேயே நின்று கொண்டு இருப்பதை பார்த்து சந்தேகப்பட்டு காரில் இருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

 

cannabis

 

அப்போது அவர்கள் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக தெளிவில்லாமல்  பதில் சொன்னதும் இன்னும் சந்தேகத்தை ஏற்படுத்தியது போலீசுக்கு. இதைத் தொடர்ந்து காரையும், அந்த 2 வாலிபர்களையும் சமயபுரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர். மேலும் காரில் சோதனை செய்த போது, காரின் பின்புறம் 212 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு பொட்டலத்திலும் தலா 2 கிலோ கஞ்சா அடைத்து வைக்கப்பட்டிருந்தது.

 

மேலும் அதை கடத்தி வந்தவர்கள் ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே உள்ள குண்டூரை சேர்ந்த கவுசிக், துர்க்காராவ் என்பதும் தெரியவந்தது. விஜயவாடா திருச்சியில் உள்ள சில முக்கிய பிரமுகர்களுக்கு அனுப்புவதாகவும், திருச்சியை நெருங்கும்போது சம்பந்தப்பட்ட நபர்களுக்கு போன் மூலம் தகவல் கொடுத்தவுடன் அவர்கள் வந்து கஞ்சாவை வாங்கி செல்வார்கள் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

ஆந்திராவில் இருந்து அந்த மாநில பதிவெண் கொண்ட காரில் வந்த வாலிபர்கள், தமிழக எல்லைக்குள் வந்தபோது போலீசாரிடம் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக வேறு நம்பர் பிளேட்டை மாற்றி வந்துள்ளனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்து, வாலிபர்கள் 2 பேரையும் கைது செய்தனர். திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாஉல்ஹக் சமயபுரம் போலீஸ் நிலையத்திற்கு வந்து மேல் விசாரணை நடத்தினார்.

 

cannabis

 

பின்னர் உயர் அதிகாரிகளின் ஆலோசனையின்படி திருச்சியில் உள்ள போதை தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாரிடம், கைதான வாலிபர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்களை சமயபுரம் போலீசார் ஒப்படைத்தனர்.

 

இது சம்மந்தமாக விசாரணை அதிகாரிகளிடம் பேசும் போது, பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு சுமார் ரூ.30 லட்சம் இருக்கும். இது போன்று தொடர்ந்து கஞ்சா பொட்டலங்கள் கடத்தி வந்து திருச்சியில் உள்ள ரவுடிகள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விநியோகம் செய்துள்ளனர்.

 

மேலும் ராமேஸ்வரம்  வழியாக இலங்கைக்கு அதிக விலைக்கு விற்பதற்காக கஞ்சா கடத்தி செல்வதும் விசாரணையில் தெரியவந்தது. இதில் சம்மந்தப்பட்ட முக்கிய புள்ளிகள் சிக்கினால்தான், இதில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது பற்றி தெரியவரும் என்றனர்.

 

போலீஸ் வழக்கம்போல் கஞ்சா விற்கும் ரவுடி தலைவனிடம் பேரம் பேசிட்டு வேறு யாரையும் சிக்க வைத்து தலைவனை தப்பிக்க வைக்குமா? என்பது போக போக தான் தெரியும்.
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி வெட்டி கொலை; போலீசார் விசாரணை

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
drug dealer hacked to in broad daylight; Police investigation

புதுச்சேரி கோவில் திருவிழாவில் கஞ்சா வியாபாரி ஒருவரை ஐந்து நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி மாநிலம் பெரிய நகர் பகுதியைச் சேர்ந்தவர் ருத்ரேஷ். அந்தப் பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்த இவர் மீது கொலை முயற்சி வழக்கு, கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பெரியார் நகர் கங்கையம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இன்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. அதில் ருத்ரேஷின் தாய் மற்றும் தங்கை ஆகியோர் பால்குடம் எடுத்தனர். அதற்காக அங்கு ருத்ரேஷ் வந்திருந்த போது, கோவிலில் பதுங்கி இருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ருத்ரேஷை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொடூரமாக படுகொலை செய்தனர்.

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி பால் குட ஊர்வலத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உருளையன்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

சீரழிவின் உச்சிக்கு செல்லும் தமிழ்நாடு- அன்புமணி ராமதாஸ் கண்டனம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Tamil Nadu on the verge of degradation- Anbumani Ramadoss condemned

சென்னை கண்ணகி நகர், சுனாமி நகர் குடியிருப்பு 64ஆவது பிளாக்கில் வசித்து வரும் சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ளவர் உமாபதி. இவர் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்ய முயன்ற போது போலீசாரை கற்களால் தாக்கிய சம்பவம் தொடர்பாக வீடியோ காட்சிகள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சென்னை கண்ணகி நகரில் உமாபதி என்ற கஞ்சா வணிகரை கைது செய்வதற்காக சென்ற இரு காவலர்களை கஞ்சா போதையில் இருந்த உமாபதியும், அவரது நண்பரும் இணைந்து கண்முடித்தனமாக தாக்கியதில் இரு காவலர்களும் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மருத்துவம் பெற்று வருகின்றனர்.

அதேபோல், கும்பகோணம் பாலக்கரையில் கஞ்சா போதையில் இருந்த 8 பேர் கொண்ட கும்பல் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துநரையும், அதை படம் பிடித்த இரு செய்தியாளர்களையும்  கொடூரமாகத் தாக்கியுள்ளனர். கஞ்சா அடிமைகளால் காவல்துறையினர்,  போக்குவரத்துத் தொழிலாளர்கள், செய்தியாளர்கள், பொதுமக்கள் என எந்தத் தரப்பினருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை  ஏற்பட்டிருப்பது பெரும் கவலையும், அதிர்ச்சியும் அளிக்கிறது.

கண்ணகி நகரைச்  சேர்ந்த உமாபதி கஞ்சா வணிகம் செய்வதையே முழு நேரத் தொழிலாகக் கொண்டவர். இதற்காக பல முறை கைது செய்யப்பட்ட போதிலும் உடனடியாக விடுதலை செய்யப்பட்டு விடுவதால் அவருக்கு சட்டத்தின் மீது எந்த அச்சமும் இல்லை.  அவர் கஞ்சா வணிகம் செய்வது குறித்து காவல்துறையினருக்கு புகார் அளித்த இருவரைப் பற்றிய விவரங்களை காவல்துறையினரிடம் இருந்து பெற்ற உமாபதி அவர்கள் இருவரையும் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சித்துள்ளார். அவர்களும் ஆபத்தான நிலையில் மருத்துவம் பெற்று வருகின்றனர். இது குறித்த வழக்கில் கைது செய்யச் சென்ற போது தான் காவலர்களை அவர் தாக்கியுள்ளார்.

Tamil Nadu on the verge of degradation- Anbumani Ramadoss condemned

உமாபதி உள்ளிட்ட கஞ்சா வணிகர்கள், கஞ்சா போதைக்கு அடிமையானவர்களைக் கண்டு அஞ்சி நடுங்குவதாக கண்ணகி நகர் மக்கள் தெரிவித்துள்ளனர். கண்ணகி நகர் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் இதே நிலைதான் காணப்படுகிறது. மது போதையை கடந்து கஞ்சா போதைக்கு சிறுவர்கள் கூட அடிமையாகிக் கிடக்கின்றனர். பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் கூட கஞ்சா போதையில் செல்வதும், அதைக் கண்டித்து எச்சரிக்கும் ஆசிரியர்களைத் தாக்குவதும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.  கஞ்சா போதைக்கு செல்லாமல் இளைய தலைமுறையினரைத் தடுப்பதும், போதைக்கு அடிமையாவதைத் தடுப்பதும் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன.

சென்னை உட்பட  தமிழ்நாடு  முழுவதும் கஞ்சா, அபின், ஹெராயின், கோகைன், எல்எஸ்டி என, அனைத்து வகையான போதைப் பொருட்களும் கிடைக்கின்றன. 24 மணி நேரம் வரை போதையில் மிதக்க வைக்கும் போதைப்பொருட்கள் கூட சென்னையில் தாராளமாகக் கிடைக்கின்றன. தமிழகத்தில் போதைப் பொருட்கள் நடமாட்டமும், கடத்தலும் கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வருகின்றன. உலக அளவிலான போதைப் பொருட்கள் பயன்பாடு மற்றும் கடத்தல் மையமாக தமிழகம் மாறி வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

தமிழகத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டமும், பயன்பாடும் அதிகரித்து வருவது குறித்தும், அவற்றை ஒழிக்க வேண்டியதன் தேவை குறித்தும் பல ஆண்டுகளாகவே வலியுறுத்தி வருகிறேன். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்த போதும் போதைப் பொருட்களை கட்டுப்படுத்தும்படி வலியுறுத்தினேன். ஆனால், போதைப் பொருட்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த அரசும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. அதன் விளைவு தான் தமிழகத்தில் போதைப்பொருட்கள் தலைவிரித்தாடுகின்றன.

தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகரிக்கும் போதெல்லாம் கஞ்சா வேட்டை என்ற பெயரில் காவல்துறையினர் சில ஆயிரம் பேரை கைது செய்வார்கள். ஆனால், அடுத்த நாளே அவர்கள் வெளியில் வந்து மீண்டும் கஞ்சா வணிகத்தைத் தொடங்கி விடுவார்கள். ஆட்சியாளர்கள் மற்றும் காவல்துறையினரின் மறைமுக ஆதரவுடன் தான் தமிழ்நாட்டில் கஞ்சா வணிகம் நடைபெறுகிறது என்று வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டுகிறேன். தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படா விட்டால், இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது என்பதே உண்மை.

தமிழ்நாடு இன்று எதிர்கொள்ளும் மிக முக்கிய பிரச்சனையே போதைப் பொருட்கள் நடமாட்டமும், அதனால் இளைஞர்கள் சீரழிவதும் தான். தமிழ்நாடு அரசு இனியாவது விழித்துக் கொண்டு போதைப் பொருட்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; தமிழகத்தை போதையில்லாத மாநிலமாக மாற்ற வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.