தமிழகத்தில் ஆங்காங்கே கொலை, கொள்ளை சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது. குறிப்பாகப் பழிக்குப்பழியாக நடக்கும் கொலை சம்பவங்கள் பொதுமக்களிடம் அச்சத்தையும் அதிர்வலையையும் ஏற்படுத்தி உள்ளன. இந்த கொலை கொள்ளைகளில் ஈடுபட்டவர்களும், கொலையானவர்களும் பலர் ரவுடிகள் பட்டியலில் ஏற்கனவே இருந்தவர்கள் தான்.
போலீசார் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் இரவு நேர ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். இருந்தாலும் இது போன்ற சில சம்பவங்கள் நடந்து விடுகின்றன. இதையடுத்து குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் தமிழகம் முழுக்க ரவுடிகள், கொலை, கொள்ளை, வழிப்பறி போன்றவற்றில் ஈடுபட்டு கைதாகி ஜாமீனில் உள்ள ரவுடிகள், தலைமறைவாக உள்ளவர்களைக் கைது செய்யச் சமீபத்தில் டி.ஜி.பி. சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் குற்றச் சம்பவம் தடுக்கும் வகையில் 23ந் தேதி இரவு மாவட்டம் முழுவதும் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 60 குழுக்கள் அமைக்கப்பட்டு ரவுடிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு முதல் மறுநாள் காலை வரை விடிய விடிய கிரிமினல்களை பிடிக்கும் வேட்டை நடந்தது. அதில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 13 ரவுடிகளை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் சிலரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் அதிரடி தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெறுகிறது.