Skip to main content

'எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்?'-மீனவர்கள் கைதுக்கு இபிஎஸ் கண்டனம்  

Published on 23/09/2024 | Edited on 23/09/2024
'Where have your 40 MPs gone?'-EPS condemns the arrest of fishermen

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களின் மூன்று விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தது மட்டுமல்லாமல், 37 மீனவர்களை நேற்று முன் தினம் (21-09-24) கைது செய்தனர். கைதான 37 பேரும் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த சம்பவம் ஓய்வதற்குள், மீண்டும் தமிழகத்தைச் சேர்ந்த 5 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் 5 பேர், நெடுந்தீவு பகுதிக்கு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், 5 பேரின் விசைப்படகுகளை கைது செய்து அவர்களை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் தமிழக மீனவர்கள் கைதுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பூம்புகார் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை ஒரு சில நாட்களுக்கு முன் 37 மீனவர்களுடன் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற நிலையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதன் காரணமாக பூம்புகார் துறைமுகத்தில் மீனவர்கள் கடந்த இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

'Where have your 40 MPs gone?'-EPS condemns the arrest of fishermen

தன் தந்தை நாணய வெளியீட்டு விழாவிற்கு உங்களின் ஒரு வார்த்தை அழைப்பை ஏற்று, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் வந்தார். ஒருவரின் மகிழ்ச்சிக்காக நடைபெற்ற கார்பந்தயத்திற்கு ஒரே நாளில் மத்திய தடையில்லா சான்றிதழ் பெற்றீர்கள். நடுக்கடலில் எழுதாத பேனா சிலை வைக்க மத்திய தடையில்லா சான்றிதழ் பெற்ற அதிகாரம் மிக்க நீங்கள், ஏன் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் பிடிபடும்போதும், கொல்லப்படும்போதும், உளமார்ந்த உறுதியான நடவடிக்கை எடுக்காமல், பெயரளவிற்கு கடிதம் மட்டுமே எழுதுகின்றீர்கள்?

தமிழக மீனவர் பிரச்சனையை தீர்க்க மத்திய அரசின் உறுதியான நடவடிக்கையை விடியா திமுக அரசால் நிர்ப்பந்தித்து பெறமுடியவில்லை. தனக்கோ, தன்குடும்பத்திற்கோ தேவையென்றால், ஒரு நொடியில் சாதித்துக் கொள்ளும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக மீனவர்களுக்கோ, தமிழக நலனுக்கோ பாதிப்பு ஏற்படும்போது ஏனோ தானோ என்று கடிதத்துடன் நிறுத்திக்கொள்கிறீர்கள்.

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள். இனியாவது விரைந்து செயல்பட்டு, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து இலங்கை சிறையில் அடைபட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் விடுவிக்க முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்