
ம.தி.மு.க.வின் மாணவர் அணி மாநில - மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் எழும்பூரில் உள்ள தாயகத்தில் நடந்தது. இதில் தலைமை கழகச் செயலாளர் துரை வைகோ பேசினார். உடன் துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, மாநில மாணவரணி செயலாளர் பால சசிகுமார், கழக அமைப்புச் செயலாளர் வந்தியத்தேவன், தீர்மான குழு செயலாளர் மணிவேந்தன் ஆகியோர் இருந்தனர்.
அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த துரை வைகோ, “நாட்டில் ஆளுநர் பதவி தேவையில்லை. அதை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். பாஜக ஆளாத மாநிலத்தைத் தேர்வு செய்து பாஜக தொடர்புடைய நபரை ஆளுநராக நியமனம் செய்து மாநில அரசின் உரிமைகளை பாஜக பறித்து வருகிறது. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த நாட்டிற்கு ஆளுநர் தேவையில்லை என்ற எங்கள் குரல் ஒலிக்கும். பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம். இவற்றின் விலை உயர்வுக்கு மூல காரணம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு. கால சூழலுக்கு ஏற்ப நெய்யின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்கு மதிமுக ஆயத்தமாகத் தயாராகி வருகிறது. திமுகவுடனான கூட்டணி தொடரும். உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் பொறுப்பேற்று இருப்பதில் எந்தத் தவறும் இல்லை. வாரிசு அரசியலில் என்ன தவறு இருக்கிறது. திறமை உள்ளவர்கள் அரசியலுக்கு வருகின்றனர். அடுத்ததாக உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக ஏற்றுக்கொள்ள திமுகவும், தொண்டர்களும் முன்வந்தால் அதனை நாங்களும் வரவேற்கிறோம். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகத் தகுதியானவர்தான்” என்று கூறினார்.