Skip to main content

“மாணவர்களின் ஆர்வம் வருத்தமளிக்கும் செய்தியாக உள்ளது” - அமைச்சர் உதயநிதி வேதனை

Published on 18/01/2023 | Edited on 18/01/2023

 

Udayanudhi inaugurated free coaching classes for competitive exams

 

தமிழக அரசு வேலைவாய்ப்புகளில் மட்டும் மாணவர்கள் ஆர்வம் காட்டுவது வருத்தமளிக்கக் கூடிய செய்தியாக உள்ளது என தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். 

 

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முறை வழிகாட்டு மையம் நடத்தும் போட்டித்தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளை தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவில் மாணவர்களுக்கான சிறப்புக் கையேடுகள் வழங்கப்பட்டன.

 

இவ்விழாவில் பேசிய அமைச்சர், “சுதந்திரம் அடைந்து இந்த நாள் வரை தமிழகத்தில் அரசு ஐ.டி.ஐ.க்களின் எண்ணிக்கை 91 மட்டுமே. கடந்த ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்ற பின் 11 புதிய ஐ.டி.ஐ.க்களை துவங்கியுள்ளோம். மேலைநாடுகளில் தரப்படும் கல்வியைப் போன்று தமிழக மாணவர்கள் பெறும் வகையில் டாடா கன்சல்டன்சி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு ஐ.டி.ஐ.க்கும் 30 கோடிக்கும் மேல் ஒதுக்கீடு செய்து அந்த ஐ.டி.ஐ.க்களை தரம் உயர்த்த 2800 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசு ஐ.டி.ஐ.க்களில் இந்தாண்டு சேர்க்கை 94 சதவீதமாக உயர்ந்துள்ளது. 

 

தமிழக மாணவர்கள், இளைஞர்கள் டி.என்.பி.எஸ்.சி தேர்வில் காட்டும் ஆர்வத்தை மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் காட்டுவதில்லை. இது மிக வருத்தம் அளிக்கக்கூடிய செய்தி. தமிழகத்தைச் சேர்ந்தவர்களில் 2% பேர் தான் மத்திய அரசின் போட்டித்தேர்வுகளில் கலந்து கொண்டு தேர்ச்சி பெறுகிறார்கள் என்று புள்ளி விவரங்கள் குறிப்பிடுகின்றன. 

 

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ்நாட்டினைச் சேர்ந்தவர்கள் பணிபுரிவதை விட வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகமாகப் பணிபுரிவதற்கு இதுவும் ஒரு காரணமாக உள்ளது. இது உண்மையிலேயே வருத்தமளிக்கக்கூடிய ஒன்று. இதனை நாம் உடனடியாகச் சரிசெய்ய வேண்டும் என்கிற நோக்கில் மத்திய அரசுப் பணிகளுக்கு மாணவர்களைத் தயார்ப்படுத்தும் வகையில் மாவட்டந்தோறும் போட்டித்தேர்வுகளுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்புகளை அரசு துவங்குகிறது.” எனக் கூறினார்.

 


 

சார்ந்த செய்திகள்