Skip to main content

"எடப்பாடி பழனிசாமிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது" - டிடிவி.தினகரன் பேச்சு!

Published on 19/03/2021 | Edited on 19/03/2021

 

tn assembly election ammk party ttv dhinakaran election campaign

 

கடலூர் மாவட்டம் புவனகிரியில், அ.ம.மு.க.வின் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று (18/03/2021), சிதம்பரம் சட்டமன்றத் தொகுதியின் அ.ம.மு.க. வேட்பாளர் நந்தினி தேவி, புவனகிரி சட்டமன்றத் தொகுதியின் அ.ம.மு.க. வேட்பாளர் பாலமுருகன், காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதியின் அ.ம.மு.க. வேட்பாளர் நாராயணசாமி மற்றும் திட்டக்குடி சட்டமன்றத் தொகுதியின் அ.ம.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் உமாநாத் ஆகியோரை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொண்டார்.

 

tn assembly election ammk party ttv dhinakaran election campaign

 

அப்போது பேசிய டிடிவி.தினகரன், "தி.மு.க. யாரையும் நம்பாத ஒரு கட்சி. குஜராத்தில் உள்ள ஐபேக் நிறுவனத்தை மட்டும் நம்புகிறது. 50 ஆண்டுகள் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு மரியாதை இல்லை. அடுத்த ஒரு கட்சி துரோகக் கட்சி, அது எந்த கட்சி என்று உங்களுக்குத் தெரியும். இங்கு வந்த முதல்வர் வானத்திலிருந்து குதித்து போல பேசியிருப்பார். நாம் தொண்டர்களை நம்பி தேர்தலில் நிற்கிறோம். அவர்கள் பணத்தை நம்பி தேர்தலில் நிற்கிறார்கள். பணமூட்டை தோலில் போட்டுக் கொண்டு தேர்தலில் நிற்கின்றனர். தற்போது எடப்பாடி பழனிசாமிக்குத் தோல்வி பயம் வந்துவிட்டது.

 

tn assembly election ammk party ttv dhinakaran election campaign

 

வீட்டுத் தலைவிகளை ஏலம் எடுப்பது போல ரூபாய் 1,000, ரூபாய் 1,500 என்று கூறி வருகிறார்கள். அரசு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும் என்று கூறும் எடப்பாடி பழனிசாமி, நான்கரை ஆண்டுகளாக ஏன் அரசு வேலை கொடுக்கவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கப்படும். கமிஷன் ஆட்சி இருக்காது, 69 சதவீத இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீட்டைக் கணக்கெடுத்து யாரும் பாதிக்காத அளவுக்கு சம நீதியுடன் உள்ஒதுக்கீடு வழங்கப்படும். எனவே, எங்களது வேட்பாளர்களை வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.