
பாஜக தலைமையிலான ஜனநாயகக் கூட்டணி சார்பில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்திலிருந்து அதிமுக, ஐஜேகே, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டன. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, புதுவை முதல்வர் ரங்கசாமி, கிருஷ்ணசாமி, மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் அஜித்பவார், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இன்று டெல்லியில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “கொரோனா பாதிப்பு அதிகளவில் இருந்தபோது, உலகளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் இந்தியாவில் இது போன்ற நெருக்கடி ஏற்படவில்லை. எனவே தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் மோடி தலைமையிலான 9 ஆண்டுகால ஆட்சி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உலக அளவில் இந்தியாவின் பெருமையை பிரதமர் மோடி உயர்த்தியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் 330 இடங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெல்லும் என்று நம்புகிறோம். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சிறிய கட்சி பெரிய கட்சி என்ற பாகுபாடு இல்லை. அனைவருக்கும் உரிய மரியாதை தரப்படுகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அனைத்துக்கட்சியும் ஒருமித்த கருத்துடன் செயல்படுகிறது” எனத் தெரிவித்தார்.