Skip to main content

எமர்ஜென்சியை விட மோடி அரசின் ஆட்சி மோசமானது! - யஷ்வந்த் சின்கா 

Published on 25/04/2018 | Edited on 25/04/2018

இந்திராகாந்தி காலத்தில் கொண்டுவரப்பட்ட எமர்ஜென்சியை விட மோடி அரசின் நான்காண்டு கால ஆட்சி மிக மோசமானதாக இருப்பதாக யஷ்வந்த் சின்கா தெரிவித்துள்ளார்.

 

Yashwant

 

பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான யஷ்வந்த் சின்கா, தொடர்ந்து மோடி அரசின் நடவடிக்கைகள், செயல்பாடுகள் குறித்து விமர்சித்து வந்தார். இந்நிலையில், கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி பாஜகவில் இருந்து விலகி, அரசியல் வாழ்க்கையை துறப்பதாக அறிவித்தார்.

 

இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த யஷ்வந்த் சின்கா, இந்திராகாந்தி பிரதமராக இருந்த காலத்தில் கொண்டுவரப்பட்ட எமர்ஜென்சியை விட மோடி அரசின் இந்த நான்காண்டு கால ஆட்சி மிகமோசமானதாக உள்ளது என்றும், இந்த ஆட்சியில்தான் நாட்டில் உள்ள அனைத்து சமுதாய மக்களும் பாதுகாப்பற்ற சூழலை உணர்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டியுள்ளார். 

 

மேலும், பட்ஜெட் கூட்டத்தொடரின் போது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்படாமல் போனதற்கு மத்திய அரசுதான் காரணம். உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம் மற்றும் ஊடகங்களைக் கைப்பற்றி தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள மோடி அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை மற்றும் என்.ஐ.ஏ. போன்ற தன்னாட்சி அமைப்புகளை எதிர்க்கட்சித் தலைவர்களை மிரட்ட பயன்படுத்துகிறார்கள். என் விமர்சனங்களின் உண்மைத்தன்மையை பாஜக உறுப்பினர்களே பலரும் தனிப்பட்ட முறையில் ஆமோதிக்கின்றனர். பலரும் வாய்திறக்க தயங்குகின்றனர்’ என தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.