Skip to main content

மோடி பங்கேற்கும் விழா! புதுச்சேரியில் கடும் எதிர்ப்பு! 

Published on 07/01/2022 | Edited on 07/01/2022

 

Modi to attend ceremony Strong opposition in Pondicherry!

 

டிசம்பர் 12ஆம் தேதி விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரியில் தேசிய இளையோர் தின விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரான், கொரானோ வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் மோடி பங்கேற்கும் இந்தத் தேசிய இளைஞர் தின விழாவுக்கு புதுச்சேரி அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

 

Modi to attend ceremony Strong opposition in Pondicherry!

 

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "நாட்டில் கரோனா ஒன்று மற்றும் இரண்டாவது அலையில் லட்சக் கணக்கான மக்கள் கொத்துக் கொத்தாக இறந்தார்கள். அப்போது அவர்களை காப்பாற்ற மோடி தலைமையிலான அரசு ஒன்றும் செய்யவில்லை. இந்த சூழ்நிலையில் உருமாறிய வைரஸாக ஒமிக்ரான் வைரஸ் வேகமாக நாட்டில் பரவி வருகிறது. மூன்று மடங்கு வேகமாகப் பரவக் கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், புதுச்சேரியில் இளைஞர் திருவிழா நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள இந்த சூழ்நிலையில் இந்த விழா தேவைதானா? இந்த விழாவில் கலந்து கொள்ளும் முடிவை பிரதமர் மோடி மறு பரிசீலனை செய்ய வேண்டும். மேலும் பிரதமர் வருவதை கவர்னர் அறிவிக்கிறார். முதல்வருடன் பேசி கலந்து தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதா என்று தெரியவில்லை!?  இளைஞர் திருவிழா புதுச்சேரியில் நடைபெற்றால் வெளிமாநிலங்களில் இருந்து 8,000 இளைஞர்கள் வரக்கூடும். இவர்களால் தொற்றும் அதிகரிக்கும். எனவே இளைஞர் திருவிழாவை புதுச்சேரியில் நடத்துக்கூடாது" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

 

Modi to attend ceremony Strong opposition in Pondicherry!

 

சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க மாநில அமைப்பாளருமான  இரா.சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா, ஒமைக்ரான் தொற்று பரவலை தடுக்க மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவ வல்லுனர்கள் எச்சரித்து வருகின்றனர். அதனை மீறி புத்தாண்டு கொண்டாட்டம் நடத்தப்பட்டது. இதனால் தற்போது புதுச்சேரியில் கரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று அதிகரித்துள்ளது. இந்நிலையில் தேசிய இளையோர் தின விழா வரும் 12-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை நடத்த தீவிரமாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.  கரோனா தொற்று அதிகமுள்ள வடமாநிலங்களில் இருந்து நிறைய இளைஞர்கள் புதுச்சேரிக்கு வர ஏற்பாடு செய்து வருகின்றனர். 


இதனால் புதுச்சேரி மீண்டும் கடும் பாதிப்புகளை சந்திக்க நேரிடும். புதுச்சேரியின் பொருளாதாரம் முற்றிலும் படுத்துவிடும். விழா நடத்தி தொற்றை பரப்பிவிட்டு வீடுகளில் மக்களை முடக்க வேண்டிய நிலையும் ஏற்படும். தேசிய இளைஞர் விழா என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ்.ஐ. வளர்க்க மத்தியில் ஆளும் பா.ஜ.க. முயற்சித்து வருகிறது. இதற்கு புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் அரசு துணை போகக்கூடாது. எனவே தேசிய இளைஞர் விழாவை புதுச்சேரியில் நடத்துவதை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கைவிட வேண்டும். மேலும் இவ்விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பதையும் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் தேசிய இளைஞர் விழா எங்கெங்கெல்லாம் புதுச்சேரியில் கொண்டாடப்பட உள்ளதோ அங்கெல்லாம் போராட்டங்களை முன்னெடுப்போம்" என குறிப்பிட்டுள்ளார்.

 

இதேபோல் புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் கோ.சுகுமாரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில அமைப்பாளர் சி.ஸ்ரீதர், புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு தலைவர் சி.சு.சுவாமிநாதன் மற்றும் பல்வேறு பொதுநல அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் தேசிய இளைஞர் தின விழா நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.