Skip to main content

“இரட்டை இலைக்கெல்லாம் ஓட்டு விழுகாது” - அமைச்சர் ஐ.பெரியசாமி 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Minister I. Periyasamy press meet

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் சி.பி.எம். வேட்பாளர் சச்சிதானந்தம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யவந்தார். அப்போது அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அமைச்சர் சக்கரபாணி, சி.பி.எம். மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், எம்.எல்.ஏ. ஐ.பி.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் பூங்கொடியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அதன்பின் வேட்பாளர் சச்சிதானந்தம் கலெக்டர் மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் உறுதிமொழியும் எடுத்துக்கொண்டார்.

அமைச்சர் ஐ.பெரியசாமி பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசும்போது, “கடந்த முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வரலாறு காணாத வெற்றியை பெற்ற திமுக வேட்பாளர் வேலுச்சாமி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை ஒரு பைசா கூட வீணாக்காமல் திண்டுக்கல் தொகுதி முழுவதும் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் நலத்திட்டங்களை செயல்படுத்தினார். குறிப்பாக இதுவரை செல்போன் டவர் வசதி இல்லாத மலைக்கிராம மக்களுக்கு செல்போன் டவர் வசதி செய்து கொடுத்ததோடு பழனி, மற்றும் திண்டுக்கல் - மதுரை இருப்புப்பாதையில் தரை வழிப்பாலங்கள் கட்டிக்கொடுத்து பொதுமக்களுக்கு சிரமங்களை குறைத்தார். 

நிலக்கோட்டை தொகுதியில் நீர்வரத்து பாதைகளை சீரமைத்து குளங்களுக்கு தனது சொந்த செலவில் தண்ணீர் வரச்செய்தவர் எம்.பி.வேலுச்சாமி. இதுதவிர ஆத்தூர் தொகுதியில் சமுதாய கூடங்கள், நிழற்குடைகள், அங்கன்வாடி மையங்கள், நியாயவிலைக்கடைகள் கட்டுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை அதிக அளவில் வழங்கியுள்ளார். அவரைப் போல சி.பி.எம். கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் சச்சிதானந்தமும் மக்கள் நலன் பணிகளில் அதிகம் ஈடுபடக்கூடியவர். 

இப்போது திண்டுக்கல்லில் போட்டியிடும் வேட்பாளர்களில் மண்ணின் மைந்தராக இருப்பவர் நமது தோழர் சச்சிதானந்தம் ஒருவரே. பிற கட்சிகளான அதிமுக, பா.ம.க.வேட்பாளர் இருவரும் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள். தோழர் சச்சிதானந்தத்தின் குடும்பம் விவசாய குடும்பமாகும். மூன்று முறை காமாட்சிபுரம் ஊராட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்று சிறப்புடன் நிர்வாகம் செய்தவர். இதுதவிர 24 மணி நேரமும் மக்கள் நலப்பணிகளில் ஈடுபடக்கூடியவர். 

இவரைப்போல ஒருவரை தேர்வு செய்தால்தான் மக்களின் தேவைகள் பூர்த்தி செய்ய முடியும். பாராளுமன்ற தேர்தலில் சச்சிதானந்தம் அமோக வெற்றிபெற்று மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு திண்டுக்கல்லிலிருந்து தினசரி சென்னைக்கு ரயில் வசதியும் இதுபோல திண்டுக்கல்லிலிருந்து பழனி மார்க்கமாக ஈரோட்டுக்கு ரயில் வசதியும் செய்து கொடுப்பார்” என்றார். 

அப்போது நிருபர்கள் நத்தம் விசுவநாதனும், திண்டுக்கல் சீனிவாசனும் இரட்டை இலை சின்னத்தில் திண்டுக்கல் தொகுதியில் அதிமுக வேட்பாளர் போட்டியிடுகிறார். அமோக வெற்றி கிடைக்கும் என கூறுகின்றனர். அதற்கு உங்களுடைய பதில் என்ன என்று கேள்வி கேட்டனர். “இரட்டை இலையை காண்பித்து ஓட்டு வாங்கும் காலமெல்லாம் மலையேறிவிட்டது. மக்கள் அனுதினமும் மக்களுக்கு யார் நல்லாட்சி செய்கிறார் என்பதை தெரிந்துகொள்கிறார்கள். இரட்டை இலையை வேண்டுமானால் போர்வையில் பிரிண்ட் செய்து போர்த்திக்கொள்ளலாமே தவிர வெற்றி பெறலாம் என்பதெல்லாம் பகல் கனவு என்றார். மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு தமிழக மக்களிடமிருந்து 6 லட்சம் கோடியை வரியாக வசூல் செய்துவிட்டு 1.5லட்சம் கோடியை திருப்பி நமக்கு தந்துள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இரட்டை இலைக்கெல்லாம் ஓட்டு விழுகாது என்று” கூறினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.