Skip to main content

மிகவும் அபத்தமான கருத்து..! பா.ஜ.க. மூத்தத் தலைவரைக் கண்டிக்கும் கருணாஸ்...

Published on 29/01/2021 | Edited on 29/01/2021

 

Karunas MLA about bjp L.Ganesan on virudhunagar press meet
                                                         கோப்புப் படம்

 

சிவகாசியில் கட்சி நிகழ்ச்சிக்கு வந்தபோது விருதுநகரில் செய்தியாளர்களைச் சந்தித்தார் கருணாஸ். அப்போது அவர், “ஜெயலலிதா பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்தது மிகவும் மகிழ்ச்சியான செய்தி. எங்களைப் போன்ற அடையாளம் தெரியாதவர்களுக்கெல்லாம் பல உயர்ந்த பதவிகள் வழங்கி, ‘மக்களால் நான் மக்களுக்காகவே நான்’ என கடைசிவரை மக்கள் பணியாற்றியவருக்கு இப்பேர்ப்பட்ட ஒரு விழா என்பது, ஒட்டுமொத்த தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவும் வரவேற்கக் கூடிய ஒரு செய்தி.

 

அதிமுக ஆட்சி செய்யத் தவறியதை, திமுக ஆட்சி வந்த 100 நாளில் செய்து முடிப்பேன் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளதை, முக்குலத்தோர் புலிப்படை வரவேற்கிறது. மக்கள் பிரச்சனையைத் தீர்ப்பேன் என்று எந்த அரசியல் தலைவர் கூறினாலும் வரவேற்போம். சசிகலா தற்போது உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். அவர் வீடு திரும்பியதும், அவரிடம் சந்திக்க நேரம் கேட்போம். எங்களுக்கு நேரம் ஒதுக்கும் பட்சத்தில், மரியாதை நிமித்தமாக அவரைச் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரிப்போம்.  

 

வரும் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது  குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. தற்போது வரை நாங்கள் அதிமுக கூட்டணியில் இருக்கிறோம். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பரப்புரையில் உள்ளதால், அவரைச் சந்திக்க எங்களுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. சில கட்சிகள் கூட்டணியைத் துவக்கி உள்ளனர். சில கட்சிகள் பேரங்களை ஆரம்பித்துள்ளனர். மக்கள் அதைப் பார்த்துக்கொண்டுதான் உள்ளார்கள். அவர்கள் சொல்லக்கூடிய காரணம் வேறாக இருந்தாலும், இயக்கங்களில் நடக்கக்கூடிய பேரங்களை அறிவு சார்ந்த மக்கள் உணராமல் இல்லை. இதெல்லாம் முடிந்த பிறகு, வெளிப்படையாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,  கூட்டணி கட்சிகளையும் எங்களைப் போன்ற இயக்கங்களையும் அழைத்து பேசினால்தான் கூட்டணி முடிவாகும்.

 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது சசிகலா அன்பும் பற்றும் வைத்திருந்தால், அதிமுக கட்சிக்கும் அதிமுக சின்னத்திற்கும் எந்தப் பாதிப்பும் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று பாஜக தலைவர் இல. கணேசன் கூறியிருப்பது, மிகவும் அபத்தமான கருத்து. அதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். 

 

அரசியல் எனக்கு தொழில் கிடையாது. அரசியலை வைத்து வியாபாரம் செய்யக்கூடிய கீழ்த்தரமான சிந்தனையும் எனக்கு கிடையாது. நான் சார்ந்த முக்குலத்தோர் சமுதாய இளைஞர்கள் மற்ற சமுதாயத்தை போல் இட ஒதுக்கீடு பெற்று, குறிப்பாக பிற்படுத்தப்பட்ட மக்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு, நான் சார்ந்த முக்குலத்தோர் சமுதாயத்திற்கு, மற்ற சமுதாயத்துக்கு வழங்கப்படுவது போல், ஜெயலலிதா 1994ல் கள்ளர், மறவர், அகமுடையாரை ஒன்றிணைத்து தேவர் சமுதாயம் என்று அறிவித்தார். ஜெயலலிதா அரசின் முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, உடனடியாக அதை நடைமுறைப்படுத்த வேண்டும். ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், அதிகமாக இருக்கக்கூடிய முக்குலத்தோர் சமுதாயத்திற்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.  இந்தக் கோரிக்கையை வலியுறுத்துகிறோம். 

 

எடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் அல்ல என்பது, தமிழ்நாட்டில் உள்ள 6 கோடியே 30 லட்சம் வாக்காளர்களுக்கும் தெரிந்த விஷயமே. இதை பிரேமலதா விஜயகாந்த் கூறியிருப்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை. அதிமுகவும், அமமுகவும் இணையுமா என்ற யூகத்திற்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது. 

 

200 சதவீதம், எந்த ஒரு சமுதாயத்தின் கருத்துக்களையும் ஏற்பதில் எங்களுக்கு எந்தவிதமான மாற்றுக் கருத்தும் கிடையாது. இந்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சமுதாய மக்கள், தங்கள் உரிமைகளைக் கேட்டு போராடுவார்கள். அதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது. அந்த அடிப்படை சித்தாந்தத்தில், எங்களுக்கும் அந்த உரிமை உள்ளது. எங்கள் உரிமைகளைக் கேட்கக்கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது. எங்களுடைய 26 ஆண்டுகால கோரிக்கை நிராகரிக்கப்படும் பட்சத்தில், பிற்படுத்தப்பட்ட மக்கள் வஞ்சிக்கப்படும் பட்சத்தில், அரசியல் சுயநலத்திற்காக, ஏதாவது ஒரு சமுதாயத்திற்கு, தனியாக இந்த அரசு ஏதாவது அறிவிக்குமேயானால், தமிழகத்தில் ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்டோர் சமுதாயமும், நான் சார்ந்த முக்குலத்தோர் சமுதாயமும் இணைந்து தமிழகம் காணாத ஒரு போராட்டத்தைக் காண நேரிடும்” என்றார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

“பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர்” - ராகுல் காந்தி! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
BJp RSS Organizations are against the policy of the country says Rahul Gandhi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. அக்கட்சியின் தொண்டர்களுக்கு எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வீடியோ மூலம் பல்வேறு வேண்டுகோள்களை வெளியிட்டுள்ளார். அதில், “பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர். இவர்கள் நமது அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஜனநாயக கட்டமைப்பை சிதைக்கின்றனர். அதே போன்று தேர்தல் ஆணையம் உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகளின் கட்டமைப்பை அழிக்க நினைக்கின்றனர். எனவே பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும்.

காங்கிரஸ் தொண்டர்கள் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் தொண்டர்கள்தான் நாட்டின் பாதுகாவலர்கள். மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் சிறப்பான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. நாட்டு மக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் இடம் பெறச் செய்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு நன்றி. பாஜகவையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.