Skip to main content

கலைஞரின் குருகுலத்தில் வீதிகள் தோறும் புகழஞ்சலி.... 

Published on 07/08/2020 | Edited on 07/08/2020

 

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும் தமிழகத்தின் முன்னாள் முதல்வராகவும் இருந்த கலைஞர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள் இன்று தமிழகம் முழுக்க தி.மு.க.வினரால் நடத்தப்படுகிறது. சென்னையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியின் முதன்மை நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் மெரினா கடற்கரையில் உள்ள கலைஞரின் நினைவிடத்திற்குச் சென்று அவரது நினைவிடத்தில் புகழ் மாலை அணிவித்தனர். அதேபோல் தான் தமிழகம் முழுக்க அனைத்து ஊர்களிலும் கலைஞரின் சிலைகள் மற்றும் திருவுருவப் படங்களுக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

 

கலைஞர் தொடக்கக் காலத்தில் திராவிட இயக்கக் கொள்கைகளைப் பின்பற்றிய போது தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரோடு ஈரோட்டில் சில காலம் வாழ்ந்தார். தன் வாழ்நாள் முழுக்க ஈரோடு நகரத்தை எனது குருகுலம் என பெருமை பொங்க கூறுவார் கலைஞர். அப்படிப் புகழ் பெற்ற குருகுலமான ஈரோட்டில் கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி திரும்பிய திசையெல்லாம் நிகழ்ந்தது. 

 

தி.மு.க.வினர் தங்கள் இல்லங்களுக்கு முன்பு கலைஞரின் புகைப்படங்களை வைத்து மாலை அணிவித்தனர். அதே போல் ஒவ்வொரு வீதியின் முகப்பிலும் பெரிய படங்கள் வைக்கப்பட்டு மாலை சூடப்பட்டது. அங்கு பூக்களும் வைக்கப்பட்டிருந்தது. கட்சிக்கு சம்பந்தமில்லாத பொதுமக்கள், இளைஞர்கள், இளம் பெண்கள், வயதான பெண்கள் எனப் பலரும் கலைஞர் படத்திற்கு பூக்கள் தூவி சிலர் கண்ணீர் சிந்தியது உணர்ச்சிகரமாக இருந்தது. 

 

வாழ்க்கையில் எந்த நம்பிக்கையும் இல்லாது இருந்தபோது கடவுள் போல முதியோர் உதவித் தொகை நீங்கதானே ஐயா கொடுத்தீங்க என ஒரு வயதான பாட்டி வாய் விட்டு கூறி அழுததும், இன்று நான் அரசுப் பணியில் இருப்பதற்கு நீங்கள் வழங்கிய மூன்று சதவீதம் உள்ஒதுக்கீடு தாங்க ஐயா, எங்களுக்கு நீங்க தான்யா கடவுள் என ஒரு தலித் பெண் கண் கலங்கிய நிகழ்வுகள் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. 

 

ஈரோடு கருங்கல்பாளையத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த வக்கீல் ரமேஷ்குமார் முப்பது இடங்களில் கலைஞரின் படங்கள் வைத்து மலர் மாலை சூடியதோடு அப்பகுதி மக்களுக்கு கபசுர சித்த மருந்தும் நோய் எதிர்ப்பு சக்தி சித்த மருத்துவ மாத்திரைகளும் வழங்கினார்.

 

http://onelink.to/nknapp

 

தி.மு.க. தெற்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சு.முத்துச்சாமி தலைமையில் மாவட்ட துணைச் செயலாளர்கள் ஆ.செந்தில்குமார், செல்லப் பொன்னி மனோகரன், பொருளாள் ப.க.பழனிசாமி முன்னாள் மேயர் குமார் முருகேஷ் கவிஞர் ஈரோடு இறைவன் உட்பட நிர்வாகிகள் தொண்டர்கள் ஈரோடு முனிசிபல் காலனி மற்றும் வ.ஊ.சி. பூங்காவில் உள்ள கலைஞரின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் அதே போல் அங்கு இருந்த தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா சிலைகளுக்கும் மாலை அணிவித்தனர். தொடர்ந்து தந்தை பெரியார் பிறந்து வளர்ந்த வீடான பெரியார், அண்ணா நினைவகத்திற்குச் சென்று மூன்று தலைவர்களின் திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினார்கள்.

 

ஈரோடு மாவட்டத்தில் குக்கிராமம் முதல்கொண்டு வீதிகளில் கலைஞரின் புகைப்படங்கள் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட காட்சிகள் மக்கள் மனதில் கலைஞர் நீங்காத இடம்பெற்றுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

நீலகிரியைத் தொடர்ந்து ஈரோடு; தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளன.

இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதீத வெப்பம் காரணமாக கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர்  விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் ஈரோட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் நள்ளிரவில் சிசிடிவி கேமரா பழுதானதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணும் மையம் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் அறையின் சிசிடிவி கேமரா நேற்று (28.04.2024) இரவு 11.30 மணியளவில் பழுதாகியுள்ளன. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின்னர் இன்று (29.04.2024) அதிகாலை 3.30 மணியளவில் வேறு கேமராக்கள் பொறுத்தப்பட்டன. ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷும், அதிமுக சார்பில் ஆற்றல் அசோக் குமாரும், பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் விஜயகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பாக கார்மேகனும் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த இரு சம்பவங்களும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வாக்கு இயந்திரங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனத் திமுக சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை நேரில் சந்தித்த திமுக எம்.பி, என்.ஆர்.இளங்கோ இதற்கான மனுவை அளித்துள்ளார். அதில் 'வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி முறையாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்கு இயந்திரங்கள் உள்ள அறையை சுற்றி 500 மீட்டர் சுற்றளவில் ட்ரோன் பறக்க தடை விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.