Skip to main content

“இடுக்கி மாவட்டத்தை தமிழகத்திடம் கொடுத்துவிடுங்கள்” - சீமான் 

Published on 15/11/2021 | Edited on 15/11/2021

 

"Give Idukki district to Tamil Nadu" - Seeman

 

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டதைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினரும், விவசாய அமைப்புகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அந்தவகையில், நாம் தமிழர் கட்சியின் சார்பில் தேனி மாவட்டம், பங்களாமேட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். 

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், “முல்லைப் பெரியாறு அணையில் கேரள நீர்வளத்துறை அமைச்சர் உள்ளிட்டோர் சேர்ந்து தண்ணீரைத் திறந்தனர். இதுகுறித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் கேட்டால், தமிழக அரசுக்குத் தெரிந்துதான் தண்ணீர் திறக்கப்பட்டது என்கிறார். பிறகு ஏன் தமிழகம் சார்பில் அரசியல்வாதிகள், அதிகாரிகள் அங்கு செல்லவில்லை என்பதற்குப் பதில் இல்லை. கேரள அரசியல்வாதிகள் முல்லைப் பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என்கின்றனர். தமிழர்களால் கட்டப்பட்ட அணையை இடிக்க விடமாட்டோம். வேண்டுமென்றால் அணைக்கு உள்ளே இருமாநில அரசுகளும் சரிபாதியாக நிதியைப் பங்கீடு செய்துகொண்டு புதிய அணையைக் கட்டட்டும். இதை அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

 

நடிகர் பிரித்விராஜ் முல்லைப்பெரியாறு அணை குறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டதைத் தொடர்ந்து கேரள முதல்வர் பினராயி விஜயன், அணை பாதுகாப்பாக உள்ளது. அணை குறித்து தவறான தகவல் பரப்புவோர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதேவேளையில் நீதிமன்றத்தில், அணை பலவீனமாக உள்ளது என்ற கருத்தைக் கேரள அரசு முன்வைப்பது முரணாக உள்ளது. உச்ச நீதிமன்றம் 142 அடிவரை அணையில் தண்ணீர் தேக்கலாம் என உத்தரவிட்டிருந்தபோதும், 136 அடியைத் தாண்டியபோதே, தண்ணீர் திறக்கப்பட்டதற்கு தமிழக அரசு கண்டனம் தெரிவிக்கவில்லை. அணையை இடிக்க வேண்டும் என கேரளா தரப்பில் தொடர்ச்சியாக கூறப்பட்டு வருகிறது. இதற்கும் எவ்வித கண்டனமும் இல்லை. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பதை விளக்க வேண்டும்.

 

பேபி அணையைப் பலப்படுத்த தடையாக உள்ளதாகக் கூறப்படும் மரங்களை வெட்ட 40 ஆண்டுகளாக கேரள அரசுடன் போராட வேண்டிய நிலை உள்ளது. பெருந்தலைவர் காலத்தில் தேவிக்குளம், பீர்மேடு பகுதிகள் கேரளாவுடன் சென்றது. அதைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்புப் பணி உரிமையையும் எம்.ஜி.ஆர். விட்டுக்கொடுத்தார். தற்போது அணை பலவீனமாக உள்ளது; பாதுகாப்பில்லாத சூழல் உள்ளது என்கிறார்கள். அவ்வாறு பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது என நினைத்தால் இடுக்கி மாவட்டத்தைத் தமிழகத்திடம் கொடுத்துவிடுங்கள். முல்லைப் பெரியாறு அணைக்காகப் போராடும் பாஜகவினர், நேரிடையாக பிரதமர் மோடியிடம் முறையிட்டால் விரைவில் தீர்வு கிடைத்துவிடும். பாட்டாளி மக்களுக்காக உழைக்கும் கட்சி எனக் கூறும் கம்யூனிஸ்டுகள், ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு நிலைப்பாட்டை எடுக்கின்றனர். முல்லைப்பெரியாறு விவகாரத்தில் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கின்றனர். இவர்கள்தான் மேற்கு வங்கத்தில் மம்தாவை தோற்கடிக்க பாஜகவை ஆதரித்தவர்கள். இத்தகையைச் சூழலில் தமிழக அரசு முல்லைப் பெரியாறு அணை உரிமையை விட்டுக்கொடுத்துவிடக் கூடாது. இல்லையெனில், கேரளாவுக்கு கொண்டு செல்லப்படும் உணவுப் பொருட்களைத் தடுப்போம். தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு கேரள அரசு செயல்பட வேண்டும்” என்று பேசினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.

Next Story

“தி.மு.க. அரசு தொடர்ந்து வேண்டாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறது” - சீமான் பிரச்சாரம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 D.M.K. Govt continues to engage in unnecessary work says Seeman campaign

கடலூர் நாடளுமன்ற தொகுதியில்,  நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணிவாசகத்தை ஆதரித்து கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூரில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “வள்ளலார் 1867ஆம் ஆண்டு ஏற்றி வைத்த அணையா அடுப்பு இன்று வரை பசிப்பிணியை போக்கி வருகிறது. வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் 10 லட்சம் முதல் 15 லட்சம் மக்கள் வரை நின்று வழிபட்டு வருகின்றனர். அந்த இடத்தில் திராவிட மாடல் அரசு, தோண்டி சர்வதேச மையம் அமைக்கப் போகிறது. திடீரென தி.மு.க. அரசிற்கு வள்ளலார் மீது என்ன கரிசனம். இதற்கு முன் இவர்கள் ஆட்சி செய்தார்கள்

அப்போதெல்லாம் வள்ளலாரை  தெரியவில்லையா? காரணம் இந்த சர்வதேச மையம் அமைக்க ரூ100 கோடி நிதி ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் மைத்துனர் பொறுப்பாளராக உள்ளார். சர்வதேச மையம் அமைப்பது மகிழ்ச்சி தான். ஆனால், அதனை மக்கள் கூடி வழிபடும் பெருவெளியில் அமைக்கக்கூடாது வேறு இடத்தில்  அமைத்துக் கொள்ளலாம். தேர்தல் நேரத்தில் இதனை ஏன் செய்ய வேண்டும். இன்னும் இரண்டு நாட்கள் பரப்பரை முடிந்தவுடன் இவர்கள் எப்படி தோண்டுகிறார்கள் என பார்ப்போம் .

ஏர்போர்ட் வேண்டாம் அந்த இடத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்று கூறினால் ஏர்போர்ட் கட்டுவோம் என கூறுகின்றனர். இயற்கை துறைமுகங்கள் இருக்க செயற்கை துறை முகங்கள் ஏன் எனக் கேட்டால் 1111 ஏக்கரில் செயற்கை துறைமுகம் கட்டுவோம் என கூறுகின்றனர். ஏற்கெனவே வ .உ .சி., காமராஜர் பெயரில் இருக்கும் இரண்டு துறைமுகங்களில் 50 சதவீதம் வேலை இல்லாத போது செயற்கை துறைமுகம் எதற்கு? தொடர்ந்து வேண்டாத வேலைகளில் திராவிட மடல் அரசு ஈடுபட்டு வருகிறது.

சர்வதேச சமயத்தை பெருவழியில் அமைக்க வேண்டாம். அரசில் தொடர்ந்து நீங்களே நீடிக்கப் போவதில்லை. சர்வதேச  மையத்தை  பெருவெளியில் அமைத்தால் மீண்டும் பழையபடி அந்த இடத்தில் மக்கள் வழிபடும் நிலைக்கு கொண்டு வரும் வீண் செலவை எங்களுக்கு வைக்காதீர்கள்.  திருவண்ணாமலையில் சிப்காட் வேண்டாம் என மக்கள் போராட்டம் நடத்தினால் அதை அமைச்சர் எ.வ.வேலு மூலம் மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கின்றார். தில்லியில் போராடிய விவசாயிகளை மீது துப்பாக்கி சூடு நடத்துகிறது மோடி அரசு.

தமிழகத்தில் போராடும் மக்கள் மீது குண்டர் சட்டத்தை போட்டு அடக்குமுறையை கையாளுகிறது தி.மு.க. அரசு. இந்த இரண்டு அரசுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்தியாவில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ,பி.ஜே.பி. தான் தொடர்ந்து ஆண்டு வருகிறது. கல்வியில் தரம் உயர்ந்திருக்கிறதா? குடிநீருக்கு வழியுள்ளதா? மருத்துவ கட்டமைப்பு உயர்ந்துள்ளதா? எதுவும் இல்லை. மக்கள் துன்பம், துயரம், பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் என தொடர்ந்து வருகிறது.

மாற்றம், முன்னேற்றம் எதுவுமே இல்லை. இது ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான தேர்தல். நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கடந்த முறை 39 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. ஏதாவது மாற்றத்தை கொண்டு வந்தார்களா. இந்த தொகுதியில் படித்தவர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்தவர் மணிவாசகம்  வேட்பாளராக இருக்கிறார். சிந்தித்துப் பார்த்து  அவருக்கு மைக் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

நாம் தமிழர் கட்சி தொகுதி தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகி சீனிவாசன், சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்