
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு முதன் முறையாக ஜம்மு காஷ்மீருக்கு இன்று (06-06-25) பிரதமர் மோடி சென்றுள்ளார். அங்கு சென்ற அவர், செனாப் நதியின் குறுக்கே ரூ.1,400 கோடி செலவில் 359 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்ட உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தை திறந்து வைத்தார். அதன் பின்னர், மாதா வைஷ்ணோ தேவி கோயில் உள்ள கத்ராவில் இருந்து ஸ்ரீநகர் வரை இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள் உட்பட, ரூ.46,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல மேம்பாட்டுத் திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து கத்ராவில் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசியதாவது, “இன்றைய நிகழ்ச்சி இந்தியாவின் ஒற்றுமை மற்றும் வலுவான மன உறுதியின் ஒரு பிரமாண்டமான கொண்டாட்டமாகும். மாதா வைஷ்ணவ தேவியின் ஆசிர்வாதத்தால், காஷ்மீர் பள்ளத்தாக்கு இப்போது ரயில் நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டுள்ளது. நாம் எப்போதும் ‘காஷ்மீர் முதல் கன்னியாகுமரி’ வரை பற்றிப் பேசி வருகிறோம், இப்போது இது ரயில்வே மூலம் நிரூபணமாகிவிட்டது. பஹல்காம் தாக்குதல் நடத்திய பாகிஸ்தானின் சதித்திட்டத்திற்கு எதிராக ஜம்மு காஷ்மீர் மக்கள் நின்றார்கள். இந்த முறை ஜம்மு காஷ்மீர் மக்கள் காட்டிய துணிச்சல் பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள பயங்கரவாத மனநிலைக்கும் ஒரு பதிலாகும். ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் பயங்கரவாதத்திற்கு தகுந்த பதிலடி கொடுக்க முடிவு செய்துள்ளனர்.

நமது இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறோம். சுற்றுலா மட்டுமே வேலைவாய்ப்பை அடைவதற்கான முக்கிய வழி. துரதிர்ஷ்டவசமாக, நமது அண்டை நாடு மனிதகுலத்திற்கு மட்டுமல்ல, சுற்றுலாவிற்கும் எதிராக இருக்கிறது. ஏழைகளின் வாழ்வாதாரத்திற்கு எதிராக தீவிரமாக செயல்படும் ஒரு நாடு அது. ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த சம்பவம் இதற்கு ஒரு தெளிவான எடுத்துக்காட்டு. இந்தியாவில் கலவரங்களைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டது. அதனால்தான் அவர்கள் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்தனர்.
இன்று ஜூன் 6, ஒரு மாதத்திற்கு முன்பு மே 6 இரவு பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு அழிவு நாள் என்பது நிரூபிக்கப்பட்டது. பாகிஸ்தான் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற செய்தியைக் கேட்கும்போதெல்லாம், அந்த அவமானகரமான தோல்வியை அது நினைவுகூரும். பாகிஸ்தான் இராணுவமும் பயங்கரவாதிகளும் தங்கள் எல்லைக்குள் இவ்வளவு ஆழமாக இந்தியா தாக்கும் என்று ஒருபோதும் நினைத்திருக்க மாட்டார்கள். அவர்களின் பயங்கரவாத உள்கட்டமைப்பு சில நிமிடங்களில் இடிபாடுகளாக மாறியது” என ஆவேசமாகப் பேசினார்.