Skip to main content

அதிகாரிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை; கர்நாடகா முதல்வரின் அரசியல் செயலாளர் நீக்கம்! 

Published on 06/06/2025 | Edited on 06/06/2025

 

Karnataka Chief Minister's political secretary removed for rcb stampede

17 வருடத்திற்கு பிறகு முதல் முறையாக ஐ.பி.எல் கோப்பையை வென்ற ஆர்சிபி அணியின் வெற்றிப் பேரணி கடந்த 4ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இதனை காண லட்சக்கணக்கானோர் அங்கு திரண்டதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி, சிறுவர்கள் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், 45க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

35 ஆயிரம் பேர் அமரக்கூடிய மைதானத்தில், 2 முதல் 3 லட்சம் பேர் வந்திருந்ததால் இந்த துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது என்றும், கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கு ஆர்சிபி நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என்றும் காவல்துறை அறிவுறுத்தலை மீறி வெற்றி பெற்ற அடுத்த நாளே வெற்றிக் கொண்டாட்டத்தை நடத்தியதாக ஆர்சிபி நிர்வாகம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து கர்நாடகா உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இத்தகைய சூழலில் தான், இந்த சம்பவம் தொடர்பாக ஆர்.சி.பி. அணி நிர்வாகம், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (கே.எஸ்.சி.ஏ), டி.என்.ஏ நெட்வொர்க்ஸ் மற்றும் சிலர் மீது கப்பன் பார்க் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது நடந்த துயர சம்பவம் தொடர்பாக அங்குள்ள எதிர்க்கட்சிகள், மாநில அரசை குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும், பொதுமக்களும் மாநில அரசு மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகிறது. இதனால், அங்குள்ள அதிகாரிகள் மீது மாநில அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தவறிய பெங்களூர் மாநகர காவல் ஆணையர் பி.தயானந்த், கூடுதல் ஆணையர் விகாஸ் குமார், துணை ஆணையர் சேகர் உள்பட 5 அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்துள்ளதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக, ஆர்சிபி அணி நிர்வாகம், மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்டவர்களை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். அதன்படி, கர்நாடகா அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முன்னதாக நேற்று (05-06-25) காலை ஆர்சிபி அணி நிர்வாகிகளான நிகில் சோஸ்லே, டி.என்.ஏவின் சுனில் மேத்யூ உள்ளிட்ட 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். 

இந்த நிலையில், முதல்வரின் அரசியல் செயலாளர் எம்.எல்.சி கோவிந்த்ராஜை பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட உத்தரவில், கோவிந்த்ராஜ் உடனடியாக தனது பணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. கர்நாடகா மாநில அரசு வெளியிட்ட அந்த அறிவிப்பில் எந்த காரணமும் குறிப்பிடவில்லை. 

சார்ந்த செய்திகள்