
தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கான ஒப்புதலை தற்பொழுது வரை தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து ஆளுநர் ஒப்புதல் அளிக்கவேண்டும் என வலியுறுத்தி வருகின்றார். இந்நிலையில் இன்று அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், 'சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த உத்தண்டி வளவு கிராமத்தைச் சேர்ந்த மணிமுத்து என்ற ஓட்டுநர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆன்லைன் சூதாட்ட தடை நீக்கப்பட்ட பிறகு, சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் நிகழும் 36-வது தற்கொலை இதுவாகும். ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டம் காலாவதியானதற்கு பிந்தைய 12 நாட்களில் நிகழ்ந்த நான்காவது தற்கொலை இதுவாகும். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது அவசரத் தேவை. ஆன்லைன் சூதாட்டத்தால் தமிழகத்தில் நிகழும் தற்கொலைகளை ஆளுநர் கண்டுகொள்ளாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. சூதாட்டத்தை தடை சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.