Skip to main content

அதிகாரிகள் கமிஷன்  எதிர்பார்கலாம்!  நான் அப்படிபட்டவன் இல்லை!!! - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் 

Published on 28/01/2019 | Edited on 28/01/2019


 

dindigul seenivasan

 

திண்டுக்கல் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம் ஜி ஆரின் 102 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திண்டுக்கல் மாநகராட்சி அருகே நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மருதராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் தலைமை கழக பேச்சாளர் வாசுகி கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்...

அதிமுக ஆட்சியை ஒழிக்க, தினமும் போராட்டம், நீதிமன்றத்தில் தடை கேட்டு வழக்கு என எத்தனையோ முயற்சிகள் நடக்கின்றன. டிடிவி தினகரன் ஆறு மாதங்களில் ஆட்சி கவிழும் என்று இரண்டு ஆண்டுகளாக கதைகளாக சொல்லி வருகிறார். அவர் தனது சின்னம்மாவுடன் சேர்ந்து கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற எத்தனையோ முயற்சி செய்தார். அத்தனையும் கடந்து தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு அதிமுக எப்பவும் தயாராக உள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு சரியாக வழங்கவில்லை என்று கூறி திமுக வழக்கு தொடர்ந்தது. இதனால் இரண்டரை ஆண்டுகளாக தேர்தல் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் கூட்டுறவு சங்க தேர்தல் நடத்தினாலும் தடை கேட்டு வழக்கு தொடர்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருப்பதற்கு மு.க. ஸ்டாலினும், திமுகவும்தான் காரணம். அவர் இரட்டைவேடம் போட்டுக் கொண்டிருக்கிறார். தமிழகத்தில் முதலமைச்சர் ஆகிவிடலாம் என்ற கனவில் அவர் மிதக்கிறார் ஆனால் அந்த கனவு நிறைவேறாது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீதான குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்கிறார். 


தாராளமாக சிபிஐ விசாரணை நடத்தட்டும்
 2ஜி வழக்கு விசாரணை நடந்தபோது சாதிக்பாட்சா மர்மமாக இறந்தார் அதேபோல் அண்ணாநகர் ரமேஷ் மரணத்தில் மர்மம் உள்ளது. இவ்விரு வழக்குகளையும் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். அப்போதுதான் யார் சிக்குவார்கள் என்பது தெரியவரும் பாராளுமன்ற தேர்தல் விரைவில் வர இருக்கிறது, தேர்தல் அறிவித்தாலும் கூட்டணி அமையலாம். ஆனால் அம்மா வழியில்  தனியாக சந்திப்பது என்ற சிந்தனையில் இருக்கிறோம். மக்கள் எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். கடந்த தேர்தலின்போது நமக்கு நாமே என்ற பெயரில் ஸ்டாலின் ஊர், ஊராக சென்றார். அதுபோல் தற்போது ஒரு ஊருக்கு கிராம சபை கூட்டத்தை போட்டு வருகிறார். உள்ளாட்சித்துறை அமைச்சராக மு.க. ஸ்டாலின் இருந்தபோது ஒரு ஊரில் ஏதாவது இப்படி கிராமசபை கூட்டம் போட்டு மக்களின் குறைகளை கேட்டு இருக்கிறாரா? தற்பொழுது பொங்கல் போனஸ் முதல்வரும், துணை முதல்வரும் சேர்ந்து ஆயிரம் ரூபாயை மக்களுக்கு கொடுத்தனர். அந்த எழுச்சி மக்கள் மத்தியில் அதிமுகவுக்கு இருந்துவருகிறது. அதற்காக தான் இப்படி ஒரு கிராம சபை கூட்டத்தை போட்டு வருகிறார். 

திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் ரயில்வே மேம்பாலம் கட்டுவதில் ஏற்படும் தாமதம் தொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி என் மீது அபாண்டமாக குற்றம் சாட்டினார். பாலம் வேலை நடக்கவில்லை என்றால் தவறு நடக்கிறது கமிஷன் எதிர்பார்க்கிறார்கள்.  அதிகாரிகள் கமிஷன் எதிர்பார்க்கிறார்கள். பில் கலெக்டர்கள் கமிஷன் எதிர்பார்க்கிறார்கள், பல்வேறு அதிகாரிகள் கமிஷன் எதிர்பார்க்கிறார்கள் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லலாம். அதை விட்டுவிட்டு தான் கமிஷன் எதிர்பார்க்கிறேன் என்று அபாண்டமாக பொய் குற்றச்சாட்டு சொல்லியிருக்கிறார். நான் அப்படிப்பட்டவனும் அல்ல. அந்த மக்களுக்கு சேர வேண்டிய பணம் எல்லாம் அவர்களுடைய பெயர்களில் வங்கியில் இருக்கிறது. என் மீது பொய் குற்றம் சாட்டிய முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி மீது சட்டரீதியாக வழக்குத் தொடர தயாராக இருக்கிறேன் என்று கூறினார்

இக் கூட்டத்தில் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் பரமசிவம், ராஜ்மோகன் மற்றும் மாநகர பகுதி செயலாளர் சுப்பிரமணி துளசிராம், மோகன் சேசு, மாவட்ட அண்ணா நூற்பாலை தொழில்சங்கசெயலாளர் ஜெயராமன் உள்பட மாவட்ட நகர ஒன்றிய பொறுப்பாளர்களுடன் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட அந்தப் பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.