Skip to main content

வாக்குகளை அள்ளிய அமைச்சர்கள்; முதல்வர் பாராட்டு

Published on 06/03/2023 | Edited on 06/03/2023

 

erode east by election vote collect by minister 

 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அதிமுக சார்பில் தென்னரசு உள்பட 73 பேர் போட்டியிட்டனர். இதில் இளங்கோவன் ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 192 ஓட்டுகளும் அதிமுக வேட்பாளர் தென்னரசு 43 ஆயிரத்து 923 ஓட்டுகளும் வாங்கியதன் மூலம் 66 ஆயிரத்து 21 ஓட்டுகள் கூடுதலாகப் பெற்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அமோக வெற்றி பெற்றார். இதில் நாம் தமிழர், தேமுதிக உள்பட 71 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.

 

இந்த அளவுக்கு திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு இமாலய வெற்றியை வாங்கிக் கொடுத்ததே முதல்வர் ஸ்டாலின் தான். அந்த அளவுக்கு தனது அமைச்சரவையில் உள்ள கே.என்.நேரு, சக்கரபாணி, செந்தில் பாலாஜி, எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன், சாமிநாதன் ஆகிய எட்டு அமைச்சர்கள் தலைமையில் குழு பிரித்து முதல்வர் ஸ்டாலின் தேர்தல் களத்தில் இறக்கினார். இவர்களோடு மற்ற அமைச்சர்கள் மற்றும் அந்தந்தப் பகுதிகளில் உள்ள மாவட்டச் செயலாளர்கள் உட்பட பொறுப்பில் இருக்கும் கட்சியினரும் தேர்தல் களத்தில் பணியாற்றினார்கள். அதன் அடிப்படையில் அமைச்சர்கள் தலைமையிலான கட்சியினரும் வார்டு வாரியாக களமிறங்கி வாக்காளர்களைச் சந்தித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை வெற்றிபெற வைத்திருக்கிறார்கள். இதில் அமைச்சர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் போட்டிப் போட்டுக் கொண்டு அதிக வாக்குகளையும் பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.

 

erode east by election vote collect by minister 

 

இதில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகிய நான்கு அமைச்சர்கள் தலைமையில் மாவட்டச் செயலாளர்களான ஐ.பி.செந்தில்குமார், இளைய அருணா, ராஜேஷ்குமார், மதுரா செந்தில் ஆகியோர் ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள கருங்கல்பாளையம், வீரப்பன்சத்திரம் ஆகிய பகுதிகளில் ஒதுக்கப்பட்ட 26, 38 மற்றும் 39 ஆகிய மூன்று வார்டுகளில் உள்ள 23 வாக்குச்சாவடிகளில் வாக்களிக்கக் கூடிய வாக்காளர்களைச் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் செய்த திட்டங்களையும் சலுகைகளையும் வாக்காளர்களிடம் எடுத்துக் கூறியதுடன் மட்டுமல்லாமல், சாதனை விளக்க நோட்டீஸ்களையும் வீடுதோறும் கொடுத்து கை சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார்கள்.

 

erode east by election vote collect by minister 

 

இதில் அமைச்சர் சக்கரபாணி ஒரு படி மேலே போய் வாக்காள மக்களை தினசரி வீடுகளில் சந்தித்து, அவர்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் நிறைவேற்றிக் கொடுத்தது மட்டுமல்லாமல் கூடிய விரைவில் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் தலைவர் வழங்க இருக்கிறார்கள் என்றும், ஏற்கனவே கொரோனா காலத்தில் 4000 ரூபாய் கொடுத்தோம். அதுபோல் பொங்கலுக்கு பணத்துடன் தொகுப்பு பொருட்களும் வழங்கியிருக்கிறோம். அந்த அளவுக்கு மக்களின் ஆட்சியாகவே முதல்வர் நடத்தி வருகிறார். அதனால் கூட்டணி கட்சி வேட்பாளர் இளங்கோவனை வெற்றி பெறவைப்பதன் மூலம்  அனைத்து அடிப்படை வசதிகளையும் தலைவர் மூலம் இத்தொகுதிக்கு கொண்டு வர முடியும் என்றும் கூறி இரவு பகல் பாராமல் வாக்காள மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டியதில் 23 வாக்குச்சாவடிகளில் பதிவான 16143 ஓட்டுகளில் 11101 ஓட்டுகள் கை சின்னத்திற்கும் 3318 ஓட்டுகள் இரட்டை இலைக்கும் கிடைத்தது போக மற்ற வேட்பாளர்களுக்கு 1724 ஓட்டுகள் கிடைத்தன.

 

இதில் அதிமுக வேட்பாளரை விட 7793 ஓட்டுகள் கூடுதலாக அமைச்சர்கள் பெற்றுக் கொடுத்து இருக்கிறார்கள். அதுபோல் 68.86 சதவீதம் வாக்குகள் வாங்கியதின் மூலம் மற்ற அமைச்சர்கள் குழுவை விட இந்த அமைச்சர்கள் குழு அதிக ஓட்டுகள் வாங்கிக் கொடுத்து முதலிடம் பிடித்த பெருமையை தக்கவைத்து முதல்வரிடமும் பாராட்டைப் பெற்று இருக்கிறது. அதேபோல் அமைச்சர்களான கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோருக்கு சூரியம்பாளையம், வீரப்பன்சத்திரம் பகுதியிலுள்ள 33 வாக்குச்சாவடிகள் ஒதுக்கப்பட்டதில் 68.65 சதவீதம் வாக்குகள் பெற்றுக் கொடுத்து இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறார்கள். இப்படி மற்ற அமைச்சர்கள் குழுவும் இதற்கு அடுத்தபடியான இடங்களை பிடித்து  இருக்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கணேசமூர்த்தி உடலுக்கு துரை வைகோ அஞ்சலி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Durai Vaiko Tribute to GaneshaMurthy 

ம.தி.மு.க.வின் பொருளாளராக இருந்த கணேசமூர்த்தி ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்.பி.யாக பணியாற்றி வந்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் ம.தி.மு.க.வுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி, சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது. கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி இன்று (28.03.2024) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்ததுடன் நேரில் சென்று உடலுக்கு அஞ்சலியும் செலுத்தினர்.

Durai Vaiko Tribute to GaneshaMurthy 

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறைக்கு இன்று மாலை நேரில் சென்று மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தியின் உடலுக்கு மாலை அணிவித்து ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ இறுதி அஞ்சலி செலுத்தினார். அதே சமயம் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் அஞ்சலி செலுத்தினார். அனைத்துக் கட்சி முன்னணி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் துரை வைகோ இரங்கல் உரை ஆற்றினார்.

Durai Vaiko Tribute to GaneshaMurthy 

இந்த இரங்கல் கூட்டத்தில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் முத்துசாமி, மு.பெ. சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், அ.தி.மு.க. தலைமைக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி, திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி எனப் பலரும் கலந்து கொண்டனர். 

Next Story

“பேராசான் பிறந்த இடத்திலிருந்து தொடங்குகிறேன்” - கமல்ஹாசன்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kamalhassan mnm campaign begins with erode

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தமாக ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவித்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தி.மு.க-வுடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் விவரங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏப்ரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

இந்த நிலையில் முதற்கட்டமாக ஈரோட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து ஈரோடு மற்றும் குமாரபாளையத்தில் (வெப்படை) நாளை (29.03.2024 - வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கமல், “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.