Skip to main content

ஆதரவாளர்களை கழட்டி விட்ட ஓபிஎஸ்! எடப்பாடியே மேல் என புலம்பும் அதிமுகவினர்!

Published on 29/07/2019 | Edited on 29/07/2019

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி தேனி தொகுதியை தவிர போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியை சந்தித்தது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓபிஎஸ் தேனி தொகுதியில் மட்டும் அதிக கவனம் செலுத்திவிட்டு மற்ற தொகுதிகளை கவனிக்கவில்லை என்று  அதிமுகவில் குற்றச்சாட்டு எழுந்தது. அதே போல் அதிமுகவில் ஓபிஎஸ் அணி, எடப்பாடி அணி என்று வந்த போது ஓபிஎஸ்ஸிற்கு ஆதரவாக வந்தவர்களுக்கு தேர்தலில் சீட் வாங்கி கொடுக்கவில்லை மற்றும் கட்சியில் முக்கிய பதவிகளையும் வாங்கிக் கொடுக்கவில்லை  என்ற அதிருப்தியும் அதிமுகவில் நிலவியது. 

 

admk



சமீபத்தில் மாநிலங்களவை உறுப்பினர் பதவி முடிந்து வந்த மைத்ரேயன் அதிமுக தலைமை மீது தனக்கு இருக்கும் அதிருப்தியை வெளிப்படையாகவே தெரிவித்தார். இவர் ஓபிஎஸ் அதிமுகவில் பிரிந்த போது அவருக்கு ஆதரவாக செயல்பட்டவர். இவர் அதிமுக சார்பாக மூன்று முறை ராஜ்யசபா எம்.பியாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டவர். இந்த நிலையில் மீண்டும் தனக்கு ராஜ்யசபா எம்.பி பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். அதற்கு பாஜக மூலம் அதிமுக தலைமைக்கு அழுத்தமும் கொடுத்தார் என்று கூறுகின்றனர். ஆனால் அவருக்கு ராஜ்யசபா எம்.பி பதவிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இது குறித்து விசாரித்த போது மைத்ரேயனுக்கோ அல்லது கட்சியில் இருக்கும் சீனியர்களுக்கோ ராஜ்யசபா எம்.பி பதவி கொடுத்து அனுப்பினால் அது தனது மகன் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் என்று ஓபிஎஸ் தரப்பு கருகியதே முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. 


ஆனால் எடப்பாடி தரப்பில் தனக்கு நெருக்கமானவர்களுக்கு ராஜ்யசபா எம்.பி வாய்ப்பு கொடுத்தால் பாஜக தலைமையை அணுகுவது எளிதாக இருக்கும் என்று கருதியதால் தன் மாவட்டத்தை சேர்ந்தவரையே ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்து அனுப்பி வைத்தார். கட்சியில் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு சீட் வாங்கி கொடுப்பதில் எந்த முயற்சியும் ஓபிஎஸ் எடுக்காதது அவரது ஆதரவாளர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஓபிஎஸ் மீது அதிருப்தியில் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.    

சார்ந்த செய்திகள்