Skip to main content

உதயநிதி போட்டியா?- தி.மு.க. விளக்கம்!

Published on 02/03/2021 | Edited on 02/03/2021

 

dmk party leaders pressmeet at anna arivalayam

 

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தி.மு.க. தலைமை மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு மற்றும் திமுக அமைப்புச் செயலாளர்  ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். 

 

அப்போது பேசிய கே.என்.நேரு, "இன்னும் இரண்டு அல்லது மூன்று கட்டப் பேச்சுவார்த்தைகளில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும். பெரும்பான்மையான தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடும். எத்தனை தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடும் என்பது பற்றி மு.க.ஸ்டாலின் அறிவிப்பார். தனிச் சின்னம் தொடர்பான விவகாரம் எங்களுக்கும், கூட்டணிக் கட்சிகளுக்கும் உள்ள பிரச்சனை. கூட்டணிக் கட்சிகளுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் எந்த அதிருப்தியும் இல்லை. புதுச் சின்னத்தில் ஓட்டு வாங்குவது சிரமம், அதனால் தான் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடச் சொல்கிறோம். இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை என வெளியான தகவல் தவறானது. உதயநிதி போட்டியிடுவது பற்றி மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார். 'பிக் பிரதர்' என்ற மனப்பான்மையுடன் கூட்டணிக் கட்சிகளுடன் தி.மு.க. செயல்படவில்லை. தேர்தலுக்காகவே வன்னியர் உள் ஒதுக்கீட்டை அ.தி.மு.க. அரசு அறிவித்துள்ளது. ராமர் கோயில் கட்ட மஸ்தான் நிதி அளித்தது மத நல்லிணக்க அடிப்படையில்தான். வேல் வைத்திருப்பவர்கள் மட்டும்தான் முருகக் கடவுளை வணங்குபவர்கள் என்று அர்த்தமா?" இவ்வாறு கூறினார்.

 

அதைத் தொடர்ந்து பேசிய ஆர்.எஸ்.பாரதி, "நாங்கள் ராமருக்கு எதிரானவர்கள் இல்லை; கட்சியில் பலரின் பெயர் ராமர் என்று உள்ளது. அறுபடை வீடுகளிலும் தி.மு.க.தான் வெற்றி பெற்றுள்ளது" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்