Skip to main content

தினகரனின் பரபரப்பு பேட்டி..! சசிகலாவிற்கு உடன்பாடா..?

Published on 15/02/2021 | Edited on 15/02/2021

 

Dinakaran speech about admk and bjp
                                                    கோப்பு படம்



சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைதண்டனை பெற்று பின் விடுதலையான சசிகலா, கடந்த 8ஆம் தேதி பெங்களூருவிலிருந்து சென்னை திரும்பினார். பிப். 8ஆம் தேதி பெங்களூருவிலிருந்து கிளம்பிய சசிகலாவுக்கு அவரின் ஆதரவாளர்கள் வழிநெடுக்க பெரும் வரவேற்பை அளித்தனர். அதனால், பிப். 9ஆம் தேதி காலை சென்னை வந்தடைந்தார். அதனைத் தொடர்ந்து அவரைப் பற்றி அதிமுகவின் அமைச்சர்கள் பலரும் கருத்து தெரிவித்தும் வருகின்றனர். அதற்கு அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனும் பல நேரங்களில் பதில் அளித்துவருகிறார். 

 

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில் நேற்று (14.02.2021) நடந்த திருமண விழாவில் தினகரன் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “சசிகலா விடுதலைக்குப் பின், தமிழகத்தில் பல்வேறு வேதியியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சசிகலா, சட்டத்தின் முன் தண்டிக்கப்பட்டிருந்தாலும், மக்கள் மன்றத்தில் நிரபராதி. 

 

சதியின் காரணமாக, அவர் சிறைக்குச் சென்றார். தற்போது நடக்கும் ஆட்சி, அதிகாரம் நாங்கள் கொடுத்தது. ஆளுங்கட்சி அதிகாரம் இன்னும் 10 - 15 நாட்களில் மாறிவிடும். அ.ம.மு.க. ஆரம்பிக்கப்பட்டதே, அ.தி.மு.க.,வை மீட்கத்தான். தி.மு.க. போன்ற தீய சக்தி ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில், அ.ம.மு.க. உறுதியாக உள்ளது. ‘தினகரன்கூட சென்றவர்கள் எல்லாம், ரோட்டில் நிற்பார்கள்’ என கூறுகின்றனர். தப்பித் தவறி, தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், நாங்கள் ஜாலியாக எப்போதும் போல் ரோட்டில் நிற்போம். ஆனால், ஆளுங்கட்சியினர் கீழ்ப்பாக்கத்தில் இருப்பார்கள். 

 

சசிகலா தேர்தலில் போட்டியிட, சட்ட ரீதியான முயற்சிகளை செய்து வருகிறோம். வரும் தேர்தலுக்கு முன்போ, பின்போ ஜனநாயக முறையில் அதிமுகவைப் போராடி மீட்டெப்போம். அதில் வெற்றி பெற்றதும், அவர் போட்டியிடுவார். சசிகலா போட்டியிட வேண்டும் அதுவே எனது விருப்பம்.

 

பிரதமர் மோடி தமிழகத்துக்கு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதனால் அவர் தமிழகத்துக்கு வருகை ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அதிமுக, அமமுக இணைப்புக்காக மோடி சென்னை வந்துள்ளதாக வரும் யூகங்களுக்கெல்லாம் பதில் கூற முடியாது. 

 

நான் ஏற்கனவே சிலர் உளருவதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்று சொல்லிவிட்டேன். நீங்கள் மீண்டும் என் கருத்தைக் கேட்டால், வசவாளர்கள் வாழ்க எனும் புத்தகத்தில் அண்ணா, “இடுப்பு உடைந்தது, இஞ்சி திண்ணதற்கு எல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்காதீர்கள்” என்று தெரிவித்துள்ளார், அந்தப் பதிலைத்தான் தற்போது நான் உங்களுக்கு சொல்கிறேன்” எனத் தெரிவித்தார். 

 

சசிகலா தமிழகம் வரும்போது வழிநெடுக்க வரவேற்பு அளித்தவர்கள், தற்போதைய அதிமுக தலைமை மோடிக்குக் கட்டுப்பட்டு இருப்பதாலும், சசிகலா அவ்வாறு இருக்கமாட்டார் எனவும்தான் இவ்வளவு கூட்டம் என ஒருபுறம் விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், மோடி மீதான தினகரனின் இந்த சாஃப்ட் கார்ணர் கருத்து சசிகலாவுக்குத் தெரிந்துதான் இதைப் பேசுகிறாரா என அவரின் ஆதர்வாளர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஆளுநருடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
Edappadi Palaniswami meeting with the Governor

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பெண்கள் உட்பட 59 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதோடு கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்புடைய சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்தது.

இத்தகைய சூழலில் இன்று (25.06.2024) காலை தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடங்கியது. அப்போது கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த கோரி அதிமுக உறுப்பினர்கள் மூன்றாவது நாளாக அமளியில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து அவைக்கு குந்தகம் விளைவித்ததால் அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். மேலும் இன்று ஒரு நாள் பேரவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள அதிமுக உறுப்பினர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. முன்னதாக கள்ளக்குறிச்சி சம்பவத்தைக் கண்டித்து முன்னதாக இன்றும் கருப்பு சட்டை அணிந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு வந்திருந்தனர். 

Edappadi Palaniswami meeting with the Governor

இந்நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக சென்னை ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து எடப்பாடி பழனிசாமி மனு அளித்தார். அப்போது அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் உடன் இருந்தனர். ஆளுநரை சந்தித்து மனு அளித்த பின் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், “கள்ளக்குறிச்சியின் நகரின் மையப்பகுதியில் விஷச்சாராய விற்பனை நடைபெற்றுள்ளது. எனவே இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை” எனத் தெரிவித்தார். 

Next Story

அதிமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றம்! 

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
ADMK expelled from the Legislative Assembly

சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழக சட்டசபை பேரவைக் கூட்டம் கடந்த 20 ஆம் தேதி (20.06.2024) தொடங்கியது. அப்போது மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இரண்டாம் நாளில் (21.06.2024) இருந்து பல்வேறு துறைகளின் மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று (25.06.2024) காலை தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடங்கியது. அப்போது கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த கோரி அதிமுக உறுப்பினர்கள் மூன்றாவது நாளாக அமளியில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து அவைக்கு குந்தகம் விளைவித்ததால் அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். மேலும் இன்று ஒரு நாள் பேரவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள அதிமுக உறுப்பினர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. 

ADMK expelled from the Legislative Assembly

இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டபேரவையில் பேசுகையில், “எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது, அவர் மீது போடப்பட்ட வழக்கில் சிபிஐ மீது நம்பிக்கை இல்லை எனக் காரணம் காட்டி, அதற்குத் தடை உத்தரவு வாங்கிய வீராதி வீரரான எதிர்க்கட்சித் தலைவர்தான் தற்போது கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். சட்டப்பேரவையில் திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்த அதிமுக உறுப்பினர்கள் முயற்சி செய்கின்றனர்.

நாடாளுமன்ற மக்களைவைத் தேர்தலில் திமுக கூட்டணி 40க்கு 40 தொகுதிகளில் பெற்ற வெற்றி அதிமுக கண்களை உறுத்துகிறது. அதைத் திட்டமிட்டு திசை திருப்ப இது போன்ற பிரச்சனைகளை அதிமுகவினர் கிளப்புகின்றனர்” எனத் தெரிவித்தார். முன்னதாக கள்ளக்குறிச்சி சம்பவத்தைக் கண்டித்து முன்னதாக இன்றும் கருப்பு சட்டை அணிந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு வந்திருந்தனர்.