
காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி மீது கொதிக்கும் எண்ணையை ஊற்றிய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். இப்படிப்பட்ட சம்பவம் ஆந்திராவில் நிகழ்ந்துள்ளது.
ஆந்திரா மாநிலம் ஏலூர் பகுதி சேர்ந்தவர் அனுதீப். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பி.டெக் இரண்டாமாண்டு படித்து வந்த கல்லூரி மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து அந்த மாணவி அனுதீப்பின் காதலை ஏற்க மறுத்துள்ளார். 'உன்னிடம் தனியாக பேச வேண்டும்' என அவரை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்ற அனுதீப் வீட்டின் ஒரு அறையில் அடைத்து வைத்து காதலை ஏற்றுக் கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். தொடர்ந்து கல்லூரி மாணவி காதலை ஏற்க மறுத்த நிலையில் ஆத்திரமடைந்த அனுதீப் கொதிக்கும் எண்ணெய்யை மாணவி மீது ஊற்றி தாக்கியுள்ளார். எப்படியோ அங்கிருந்து தப்பிய மாணவி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட அனுதீப் என்ற அந்த இளைஞரை தீவிரமாக தேடி வருகின்றனர்.