Skip to main content

"நிலைமை ஒன்றியம் vs மாநிலங்கள் என ஆகிவிட்டது" - கேரள முதல்வருக்கு ஜெகன்மோகன் கடிதம்!

Published on 04/06/2021 | Edited on 04/06/2021

 

jegan mohan

 

இந்தியாவில் கரோனா தடுப்பூசிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசிடமிருந்து வரும் தடுப்பூசிகள் போதாததால், மாநிலங்கள் தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரின. ஆனால் தடுப்பூசி நிறுவனங்கள் இந்திய அரசுடன் மட்டுமே தடுப்பூசி வர்த்தகத்தை மேற்கொள்வோம் என கூறிவிட்டன.

 

இதனால் மாநிலங்கள் வெளியிலிருந்து தடுப்பூசி வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசே தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என மாநிலங்களிடமிருந்து கோரிக்கை வலுத்துவருகிறது. அண்மையில் இதுதொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன், பாஜக ஆளாத 11 மாநில முதல்வர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில் தடுப்பூசியைக் கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்க நாம் அனைவரும் இணைந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என கோரியிருந்தார். பின்னர் இதே கருத்தை வலியுறுத்தி கேரள சட்டப்பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

 

இந்தநிலையில், ஆந்திர முதல்வர் தடுப்பூசி விவகாரம் தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தடுப்பூசி விவகாரம் மாநிலம் vs ஒன்றியம் என ஆகிவிட்டதாக கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக ஜெகன்மோகன் ரெட்டி தனது கடிதத்தில், "கரோனா வைரஸுக்கு எதிரான நமது கூர்மையான ஆயுதம் தடுப்பூசி. அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடுவதற்கான எங்கள் உறுதிப்பாட்டுக்கு ஏற்ப, தடுப்பூசிகளை நேரடியாக வாங்க உலகளாவிய டெண்டர் கோரியிருந்தோம். ஆனால் ஏமாற்றமளிக்கும் வகையில் யாரும் டெண்டர் கோரவில்லை. ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் இந்திய அரசிடம் உள்ளது என்பதால் நிலைமை ஒன்றியம் Vs மாநிலங்களாக மாறியுள்ளது" என தெரிவித்துள்ளார்.

 

மேலும் அவர், “முதல்வர்களாகிய நாம் அனைவரும் ஒரே குரலில் பேசி, தடுப்பூசி இயக்கத்தின் பொறுப்பை எடுத்துக்கொள்ளும்படி மத்திய அரசை வலியுறுத்துவோம் என்பது எனது கோரிக்கையாகும்" என கூறியுள்ளார். தடுப்பூசி விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே கேரள முதல்வர், பிற மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், தற்போது ஆந்திர முதல்வரும் கடிதம் எழுதியிருப்பது முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடியுடன் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு!

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
Jaganmohan Reddy meeting with Prime Minister Modi

பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆந்திரா மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி டெல்லியில் இன்று (09.02.2024) சந்தித்து பேசினார். அப்போது பிரதமர் மோடிக்கு திருப்பதி ஏழுமலையான் முழு உருவச்சிலையை நினைவு பரிசாக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வழங்கினார். இந்த சந்திப்பின் போது போலவரம் திட்டப்பணிகளை விரைவுபடுத்த நிதி ஒதுக்கீடு செய்யவும், மின்சாரத்துறை நிலுவைத் தொகையை தரவும் கோரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடியுடன் ஜெகன்மோகன் ரெட்டி சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் ஆகியோர் பிரதமர் மோடியுடன் சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது. 

Next Story

ஆந்திர அரசியலில் கால் பதித்த அம்பத்தி ராயுடு!

Published on 28/12/2023 | Edited on 28/12/2023
Ambati Rayudu who set foot in Andhra politics

நடந்து முடிந்த 16 ஆவது ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதையடுத்து ஐபிஎல் டிராபி சென்னை கொண்டு வரப்பட்டு தி.நகரில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து டிராபிக்கு பூஜை போடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத் துணைத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் என். சீனிவாசன், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் முழு நேர இயக்குநரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளருமான ரூபா குருநாத் ஆகியோர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றிருந்தனர். அதன் பின்னர் சென்னை அணியின் வீரர் அம்பத்தி ராயுடு மற்றும் ரூபா குருநாத் ஆகியோர் ஐபிஎல் டிராபியுடன் ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து வாழ்த்து பெற்றிருந்தார்.

இதற்கு முன்னதாக தான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதும், மக்களுக்கு சேவையாற்ற விரும்புவதாகக் கூறியிருந்தார். அதே சமயம் நடந்து முடிந்த ஐ.பி.எல் போட்டியுடன் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த நிலையில், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற அம்பத்தி ராயுடு, ஆந்திர அரசியலில் களமிறங்கவுள்ளதாகவும், அவர் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரருமான அம்பத்தி ராயுடு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து  ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டியை அம்பத்தி ராயுடு சந்தித்து வாழ்த்து பெற்றார்.