ஏப்ரல் 14க்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற கேள்விக்கு மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா பதிலளித்துள்ளார்.

உலகளவில் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,21,412 ஆக உயர்ந்துள்ளது. மேலும், உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,51,004 பேர் குணமடைந்துள்ளனர், 33,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் இந்த வைரசால் 1071 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாகக் கேரளாவில் 194 பேரும், மகாராஷ்டிராவில் 193 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ள சூழலில், இதிலிருந்து குணமடைந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக ஏப்ரல் 14 வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மாநில எல்லைகள் மற்றும் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன. ரயில், பேருந்து என பொதுப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யுள் கடைகளைத் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல் குறித்த கேள்விக்குப் பதிலளித்துள்ள மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா, "இதுபோன்ற தகவல்கள் எனக்கு ஆச்சரியமளிக்கிறது. இதுவரை ஊரடங்கை நீட்டிக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.