![The police arrested a hospital employee in the style of a movie in uttarkhand](http://image.nakkheeran.in/cdn/farfuture/l5J4dLDyIRD9D-n3Jiyb_0IAX0faZcXbw5B-Bns2RX8/1716457325/sites/default/files/inline-images/hospini.jpg)
உத்தரகாண்ட் மாநிலம், ரிஷிகேஷ் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் சதீஷ்குமார் என்பவர் நர்சிங் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், கடந்த 19ஆம் தேதி இதே மருத்துவமனையில் ஜூனியர் மருத்துவராக பணியாற்றி வந்த ஒரு பெண்ணுக்கு, சதீஷ் குமார் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த விவகாரம் குறித்து, சதீஷ்குமார் மீது பாதிக்கப்பட்ட பெண், மருத்துவமனை நிர்வாகத்தில் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, இது தொடர்பாகப் போலீசிடம் புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரின் அடிப்படையில், சதீஷ் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரை கைது செய்வதற்காக போலீஸ் தயாராக இருந்தது. அதன்படி, குற்றம்சாட்டப்பட்ட சதீஷ்குமாரைக் கைது செய்ய மருத்துவமனைக்கு வந்த போலீசார், தாங்கள் வந்த ஜீப்பை வெளியே நிறுத்திவிட்டு வராமல் சினிமா பட பாணியில் மருத்துவமனைக்குள்ளேயே போலீஸ் ஜீப்பை ஓட்டி வந்துள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகள் ஸ்ட்ரெச்சரில் படுத்திருக்க போலீஸ் வாகனம் நடுவில் வருவதும், அங்கிருந்த மற்றவர்கள் ஸ்ட்ரெச்சரை நகர்த்தி வாகனத்துக்கு வழிவிடுவதும் இருக்கிறது. இது குறித்து எஸ்.எஸ்.பி கூறுகையில், குற்றம்சாட்டப்பட்ட சதீஷ்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர். காவல்துறை வாகனம் மருத்துவமனையின் நான்காவது மாடிக்குக் கொண்டு செல்லப்பட்டதாக வீடியோ வெளியாகி இருக்கிறது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது’ எனத் தெரிவித்தார்.