Skip to main content

“எம்.எல்.ஏக்களை அதிகாரிகள் சந்திக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது” - சபாநாயகர் செல்வம் பேட்டி

Published on 06/06/2023 | Edited on 06/06/2023

 

Officials' refusal to meet MLAs is reprehensible - Speaker Selvam Peti

 

புதுச்சேரியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளில் ஊழல், முறைகேடுகள் நடப்பதாக உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ நேரு குற்றம் சாட்டி வந்தார். தனது தொகுதியில் நடைபெறும் அண்ணா திடல் மேம்பாட்டு பணி ஓராண்டுக்குள் முடித்திருக்க வேண்டும். இரண்டரை ஆண்டுகளாக பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது. அதோடு தரமில்லாமல் பணிகள் நடந்து வருகிறது. தொகுதிக்குட்பட்ட புதிய பேருந்து நிலைய மேம்பாட்டு பணிகளை தொடங்கவில்லை என்றும் புகார் கூறியிருந்தார்.

 

இதை கண்டித்து தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு நேற்றைய தினம் போராட்டம் நடத்தினார். ஆனால் தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா அரசு விழாவில் பங்கேற்றிருப்பதாக அவருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேரு எம்.எல்.ஏ தனது ஆதரவாளர்கள், சமூக நல அமைப்பினரோடு அரசு விழா நடந்த கம்பன் கலையரங்கிற்கு சென்றார். நேரு எம்.எல்.ஏ வரும் தகவல் கிடைத்ததை தொடர்ந்து கம்பன் கலையரங்கின் 2 நுழைவு வாயில்களையும் போலீசார் மூடினர். அங்கு வந்த எம்.எல்.ஏ, அவரின் ஆதரவாளர்களை உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்தனர். இதனால் கோபமடைந்த எம்.எல்.ஏ கேட் மீறி ஏறி குதித்து கம்பன் கலையரங்கில் உள்ளே சென்றார்.

 

அங்கு உலக சுற்றுச்சூழல் தின விழா நடந்து கொண்டிருந்தது. விழா மேடைக்கு கீழே நின்று தலைமை செயலர் மற்றும் அதிகாரிகளை பார்த்து சரமாரியாக குற்றம் சாட்டி பேசினார். மேடையில் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், தலைமை செயலர் ராஜீவ் வர்மா ஆகியோரும் இருந்தனர்.

 

இதனால் அரசு விழா சில நிமிடங்கள் தடைபட்டது. அதன் பின்னர் நேரு, விழாவில் முதல் அமைச்சர் பேச்சுக்கு இடையூறு செய்ய விரும்பவில்லை என கூறி வெளியேறினார். இந்த நிலையில் எம்.எல்.ஏ வரும் தகவல் கிடைத்தும் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை காவல்துறை எடுக்கவில்லை என புகார் எழுந்தது. அதோடு அரசு விழாவுக்கு வந்த எம்.எல்.ஏவை தடுப்பதா என்ற கேள்வியும் எழுந்தது. அவரை மட்டும் அனுமதித்து ஆதரவாளர்களை தடுத்திருக்கலாம் என கருத்து தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கம்பன் கலையரங்கில் பாதுகாப்பு பணியிலிருந்த ஓதியஞ்சாலை காவல் நிலைய ஆய்வாளர் கண்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

 

சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவரது பொறுப்பை உருளையன்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் பாபுஜி கூடுதலாக கவனிப்பார் என காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. இதனிடையே அரசு விழாவில் மூடிய கதவை ஏறி குதித்து உள்ளே சென்று வாக்குவாதம் செய்த சுயேட்சை எம்.எல்.ஏ நேரு மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

 

இதனிடையே ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம், கம்பன் கலையரங்கத்தில் சட்டமன்ற உறுப்பினர்  கதவை ஏறி குதித்த விவகாரம் போன்றவை குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுடன் சபாநாயகர் செல்வம் அவசர ஆலோசனை நடத்தினார். ADGP ஆனந்தமோகன், எஸ்.பிக்கள் மாறன், செல்வம், சுவாதி சிங், சுயேட்சை எம்.எல்.ஏக்கள் நேரு, பிரகாஷ்குமார், அங்காளன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதையடுத்து அமைச்சர்கள் தேனீ ஜெயக்குமார், சந்திர.பிரியங்கா மற்றும் என்.ஆர்.காங்கிரஸ், தி.மு.க எம்எல்ஏக்களும் கலந்து கொண்டனர்.

 

Officials' refusal to meet MLAs is reprehensible - Speaker Selvam Peti

 

இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சபாநாயகர் செல்வம், “கோரிக்கைகளை வலியுறுத்தி சந்திக்க செல்லும் எம்.எல்.ஏக்களை அதிகாரிகள் சந்திக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது. அதிகாரிகள் எம்.எல்.ஏக்களுக்குரிய மரியாதையை அளிக்க வேண்டும் என உத்தரவிடுகிறேன். மீறும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

 

மேலும் நேற்றைய நிகழ்வுக்கு முதல்வருடன் பேசி சுமூக நடவடிக்கை எடுக்கப்படும். போலீஸ் அதிகாரியின் சஸ்பெண்ட்டை நீக்கவும், எம்.எல்.ஏ மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறவும் உத்தரவிட்டுள்ளதாக சபாநாயகர் செல்வம் தெரிவித்தார். மேலும் முதல்வரின் கருணை உள்ளதால் தான் தவறு செய்யும் அதிகாரிகள் தப்பி வந்தனர். தேவைப்பட்டால் சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயும் எனவும் எச்சரித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.